Thursday 30 January 2014

கருவடாம் பலவிதம்..



சாப்பாட்டுக்கு சுவை சேர்க்கிற மொறமொறப்பான வடாம்களைப் பார்ப்போமா?

ஜவ்வரிசி முத்து வடாம்

தேவையானவை:

ஜவ்வரிசி – 1 கிலோ
பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணப் பொடிகள் – ஒவ்வொன்றும் சிட்டிகையளவு.

செய்முறை:

ஜவ்வரிசியை இரவு நன்கு களைந்து ஐந்து பாகங்களாகப் பிரித்து தனித்தனி பாத்திரங்களில் போடவும். தேவையான உப்பு, ஒவ்வொரு வண்ணப்பொடி கலந்து, ஜவ்வரிசி முழுகும் அளவு நீர் ஊற்றி வைக்கவும். ஒரு பாகத்தை கலர் சேர்க்காமல் வெண்மை நிறத்திலேயே ஊற வைக்கவும். மறு நாள் காலையில் உதிர் உதிராக இருக்கும். ஹார்லிக்ஸ், ஊறுகாய் பாட்டில் மூடிகளை எடுத்து நன்கு துடைத்து எண்ணெய் தடவவும். ஊறிய ஜவ்வரிசியை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பரப்பவும். கேஸில் குக்கரை வைத்து தண்ணீர் விட்டு சூடாக்கவும். இட்லித் தட்டு அல்லது ஒற்றைத் தட்டில் ஜவ்வரிசி நிரப்பிய மூடிகளை வைக்கவும். குக்கரை மூடி, வெயிட் போடாமல் வேகவிடவும். பிறகு பிளாஸ்டிக் பேப்பரை விரித்துப் போட்டு, அதில் மூடிகளை அழுத்தமாகத் தட்டினால் வெந்த கருவடாம் வட்டமாக விழும். வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும். தனித்தனி வண்ணமாகவோ இரண்டு மூன்று வண்ணங்களைச் சேர்த்தோ மூடிகளில் பரப்பி செய்தால் அழகாக இருக்கும். எண்ணெயில் பொரித்தெடுக்க முத்து கருவடாம் தயார்.

மிக்ஸட் கலர் கருவடாம்

தேவையானவை:

மெல்லிய பம்பாய் ரவா – 1 கிலோ
பச்சை மிளகாய் – 20
பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன்
வண்ணப் பொடிகள் – 2, 3 வண்ணம்

செய்முறை:

ரவையை காலையில் ஊற வைக்கவும். இரவு கையால் அழுத்திக் களைந்து சல்லடையில் வடிகட்டிப் பாலெடுக்கவும். மேலும் மூன்று முறை பாலெடுக்கவும். (கோதுமை அல்வாவுக்கு செய்வது போல்). பாலை ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி மூடி வைக்கவும். மறு நாள் காலை மேலே தெளிந்த நீரை இறுத்து விடவும். பாத்திரத்தில் 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும். ஒரு கப் வெந்நீரை எடுத்து வைக்கவும். பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தை நைஸாக அரைத்து, கொதிக்கும் வெந்நீரில் சேர்க்கவும். அதில் ரவாப் பாலை விட்டு கைவிடாமல் கிளறவும். தண்ணீர் போதாவிட்டால், எடுத்து வைத்த வெந்நீரை விட்டுக் கொள்ளவும். வெந்து கையில் ஒட்டாமல் வந்ததும் இறக்கவும். முதல் நாளிலிருந்து ஊறுவதால் அதில் புளிப்பு இருக்கும். மேலும் தேவையெனில் எலுமிச்சை சாறு பிழிந்து, ஓமப்பொடி தட்டில் வில்லைக் கருவடாம்களாகப் பிழியவும். வண்ணப் பொடிகளைத் தண்ணீர் விட்டுத் தனித்தனி கிண்ணங்களில் கரைத்து, இங்க் ஃபில்லரால் வடாமின் மூன்று பக்கமும் ஒவ்வொரு வண்ணத்தில் ஒரு சொட்டு விடவும். நன்கு காய வைத்து பொரிக்க ஒவ்வொரு வடாமும் கண்ணைப் பறிக்கும்.

தக்காளி கருவடாம்

தேவையானவை:

ஜவ்வரிசி – அரை கிலோ
தக்காளி – கால் கிலோ
பச்சை மிளகாய் – 12
பெருங்காயப் பொடி – அரை டீஸ்பூன்

செய்முறை:


வெந்நீரில் தக்காளியைப் போட்டு, தோல் உரித்து மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டி சாறெடுக்கவும். ஜவ்வரிசியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, வேகவிட்டு கெட்டிக் கூழாக்கவும். அதில் தக்காளி சாறு, பச்சை மிளகாய் விழுது, பெருங்காயப்பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிளாஸ்டிக் பேப்பரில் சிறு கரண்டியால் வடாம் இட்டு காயவைக்கவும். இளஞ்சிவப்பு நிற தக்காளி கருவடாம் மிக ருசியாக இருக்கும்.

உருளைக்கிழங்கு அல்வா

தேவையானவை:
உருளைக் கிழங்கு - ¼ கிலோ
சர்க்கரை -  300 கிராம்
நெய் – 150 கிராம்
முந்திரிப் பருப்பு – 10
ஏலக்காய்
பால் - ¼ கப்

செய்முறை:
உருளைக் கிழங்கை நன்கு அலம்பி, வேகவைத்து, தோலியை நீக்கி, மசிய அரைக்கவும். முந்திரியை பால் விட்டு அரைத்து உருளைக் கிழங்கு விழுதுடன் சேர்க்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் ½ கப் நீர் விட்டு, சர்க்கரையைப் போட்டு பாகு கம்பி பதம் வந்ததும், உருளைக் கிழங்கு விழுதைப் போட்டு அடி பிடிக்காமல் கிளறி நெய்யை விட்டு சுருண்டு வரும்வரை கிளறவும்.

கேசரிபவுடர், ஏலப்பொடி செய்து போட்டு அல்வா பதத்திற்கு வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டு போடவும்.



Friday 3 January 2014

அங்காயப்பொடி

தேவை :
தனியா- 1/4 கப், மிளகு - 5 டீஸ்பூன், மிளகாய்  வற்றல்- 6, சீரகம்- 2 டீஸ்பூன்,   பெருங்காயம் சிறு துண்டு, வேப்பம்பூ -  1/8  கப்,  சுண்டை  வற்றல் -20,  மணத்தக்காளி  வற்றல் - 5 டீஸ்பூன், ஆய்ந்த கறிவேப்பிலை - 1/4  கப்,  சுக்கு - 1 சிறிய  துண்டு,  ஓமம் - 2 டீஸ்பூன்,  நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
செய்முறை :  
வெறும்  வாணலியை  கேஸில்  வைத்துக்  காய்ந்ததும்  அதில்  வேப்பம்பூ  போட்டுக் கருநிறமாக வறுத்தெடுக்கவும். அதிலேயே சுண்டைக்காய் முதல் ஓமம்  வரைக் கொடுத்தவற்றை ஒவ்வொன்றாகப்   போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். 
தனியா, மிளகு, மிளகாய்  வற்றல், சீரகம்,  பெருங்காயம் ஆகியவற்றை 2 ஸ்பூன் எண்ணையில் வறுக்கவும்.
தேவையான  உப்பு   சேர்த்து மிக்ஸியில்   பொடி செய்யவும்.  
சாதத்தை ஆறவிட்டு ,  அதில் நல்லெண்ணெய்  சேர்த்து தேவையான  பொடி  சேர்த்து பிசையவும்.  நெய்யை  சுட   வைத்து  அதில் கடுகு, கறிவேப்பிலை  தாளித்து  சுட்ட  அல்லது பொரித்த அப்பளம், தயிர்ப் பச்சடியுடன்  சாப்பிடவும். 

இந்த  சாதம்  பிரசவித்த  பெண்களுக்கு அஜீரணம்   வாயு ஏற்படாமல்  தடுக்கும்.  தினமும் சிறிதளவு சாப்பிட   கைக்குழந்தைக்கு  மலச்சிக்கல்,  அஜீரணம்  வராது. பெரியவர்களுக்கும்  வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல்,  அஜீரணம்  ஏற்படும்போது  இந்த அங்காயப்பொடி சாதம்  சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும். நாம்  மறந்து  விட்ட   அந்நாளைய ஆரோக்கிய சமையலில்  இதுவும் ஒன்று.