Saturday 20 June 2015

ஜவ்வரிசி வண்ணக் கருவடாம்

தேவை

ஜவ்வரிசி 1 கிலோ

பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணப் பொடிகள் ஒவ்வொன்றும் சிட்டிகையளவு.




செய்முறை:


ஜவ்வரிசியை இரவு நன்கு களைந்து ஐந்து பாகங்களாகப் பிரித்து தனித்தனி பாத்திரங்களில் போடவும். தேவையான உப்பு, ஒவ்வொரு வண்ணப்பொடி கலந்து, ஜவ்வரிசி முழுகும் அளவு நீர் ஊற்றி வைக்கவும். ஒரு பாகத்தை கலர் சேர்க்காமல் வெண்மை நிறத்திலேயே ஊற வைக்கவும். 





மறு நாள் காலையில் உதிர் உதிராக இருக்கும். ஹார்லிக்ஸ், ஊறுகாய் பாட்டில் மூடிகளை எடுத்து நன்கு துடைத்து எண்ணெய் தடவவும். ஊறிய ஜவ்வரிசியை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பரப்பவும். 





கேஸில் குக்கரை வைத்து தண்ணீர் விட்டு சூடாக்கவும். இட்லித் தட்டு அல்லது ஒற்றைத் தட்டில் ஜவ்வரிசி நிரப்பிய மூடிகளை வைக்கவும். குக்கரை மூடி, வெயிட் போடாமல் வேகவிடவும். 




பிறகு பிளாஸ்டிக் பேப்பரை விரித்துப் போட்டு, அதில் மூடிகளை அழுத்தமாகத் தட்டினால் வெந்த கருவடாம் வட்டமாக விழும். 




வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும். தனித்தனி வண்ணமாகவோ இரண்டு மூன்று வண்ணங்களைச் சேர்த்தோ மூடிகளில் பரப்பி செய்தால் அழகாக இருக்கும். எண்ணெயில் பொரித்தெடுக்க முத்து கருவடாம் தயார்.



வாங்கிபாத் (கத்தரிக்காய் சாதம்)

தேவை

கத்தரிக்காய்--- ¼ கிலோ
பெரிய வெங்காயம்---2
உப்பு---தேவையான அளவு
எலுமிச்சம்பழம்---1 மூடி
மஞ்சள்பொடி---சிறிது
வறுத்து பொடி செய்ய
கடலைப் பருப்பு---2 தேக்கரண்டி
தனியா----3 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்---4
தேங்காய்த்துருவல்---6 தேக்கரண்டி
பெருங்காயம்----1 சிறுதுண்டு
நல்லெண்ணெய்----6 தேக்கரண்டி

தாளிக்க

கடுகு----1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு----1 தேக்கரண்டி
நிலக்கடலை---3 தேக்கரண்டி
பச்சை மிளகாய்---3
கறிவேப்பிலை---1 கொத்து

செய்முறை

சாதத்தை உதிராக வடித்து, அதில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு ஆற வைக்கவும்.

கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தைபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


நான்கு தேக்கரண்டி எண்ணையில் பொடி செய்யக் கொடுத்திருப்பவற்றை, தனித் தனியாக பொன் வறுவலாக வறுத்து, மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.


மீதி எண்ணையில்தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை வரிசையாகப் போட்டு வறுபட்டதும், வெங்காயம் சேர்த்து சற்று வதக்கி, கத்தரிக்காயையும் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.



ஆறிய சாதத்தில், வதக்கிய கத்தரிக்காய், செய்து வைத்துள்ள பொடி, தேவையான உப்பு சேர்த்து கலக்கவும். மேலே எலுமிச்சை சாறுபிழியவும்.


இதில் நிலக்கடலையை அப்படியே தாளிக்காமல், வெறும் வாணலியில் சற்று வறுத்து பொடி செய்தும் சேர்க்கலாம்.

ராய்த்தா, அப்பளம், வறுவலுடன் சாப்பிடலாம்.