Tuesday 31 May 2016

தேங்காய் பால் பட்டாணி பிரியாணி

தேவை 
பாசுமதி அரிசி – 1 கப்
பட்டாணி – 1/2 கப்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி -  2 (பொடியாக நறுக்கியது)
கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
தண்ணீர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி  - சிறுதுண்டு  
மிளகாய் பொடி  – 1 டீஸ்பூன்
தனியாபொடி  - 1 டீஸ்பூன்
பூண்டு  - 3 பற்கள்
தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
பிரியாணி இலை – 2
பட்டை – 1/4 இன்ச்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2

செய்முறை
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, களைந்து வடிய வைக்கவும்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளி சேர்க்கவும்.

தக்காளி நன்கு குழைய வெந்து சேர்ந்து கொண்டபின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக எண்ணெய் பிரியும்வரை நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் பட்டாணி, தேவையான அளவு உப்பு மற்றும் பாசுமதி அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, மீண்டும் கிளறி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, குக்கரை மூடி ஆவி வந்தபின் வெயிட் போட்டு  சிம்மில் வைக்கவும்.

பத்து நிமிடம் கழித்து, குக்கரைத் திறந்து சாதத்தை நன்கு கிளறிவிட்டு, மேலே முந்திரி வறுத்து சேர்த்து, கொத்துமல்லி பொடியாக நறுக்கிப் போட்டு அப்பளம் மற்றும் ராய்த்தாவுடன் பரிமாறவும்.

Monday 30 May 2016

இஞ்சி தொக்கு


தேவை
நறுக்கிய இஞ்சி துண்டுகள் --- 1/2 கப்
மிளகாய் வற்றல் ---4
மஞ்சள் தூள் --- 1/4 டீஸ்பூன்
புளி --- பெரிய  நெல்லிக்காய் அளவு
வெல்லம் --- பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையான அளவு.
தாளிக்க
நல்லெண்ணை --- 8 டேபிள் ஸ்பூன்
கடுகு  --- 1/2 டீஸ்பூன்
செய்முறை
அடுப்பில் வாணலியை வைத்து அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும்  மிளகாய் வற்றல் போட்டு கருகாமல் வறுத்தெடுத்து அதே எண்ணையில் இஞ்சி துண்டுகளையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

வறுத்தெடுத்த மிளகாய், இஞ்சி நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நைசாக அரைத்து கடைசியாக வெல்லத்தையும் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ளவும்.

மீண்டும் அடுப்பில் வாணலியை வைத்து  மீதமுள்ள எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு போட்டு வெடித்ததும் அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுது, மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை சுருள வதக்கி இறக்கவும்.

சூப்பரான சுவையில் காரசாரமான இஞ்சி தொக்கு தயிர் சாதத்துக்கு அருமையாக இருக்கும்.

சுக்குமல்லி காபிப் பொடி

தேவை 
கொத்துமல்லி விதை – 2 கப்
மிளகு – 2 கப்
ஜீரகம் – 1 கப்
சுக்கு – ஒரு துண்டு (1 ரூபாய் அளவுள்ளது)
கிராம்பு – 6
ஏலக்காய் – 3

செய்முறை 
ல்லா சாமான்களையும் வெறும் வாணலியில் சற்று சூடுவர வறுத்து, மிக்ஸியில் நைஸாக பொடி செய்யவும்.

1 டம்ளர் சுக்கு காபி தயாரிக்க, ஒரு ஸ்பூன் பொடியை ¾ டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும்.  

நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி, சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு 2 ஸ்பூன் சேர்த்து, பால் சேர்த்து சாப்பிடவும். 

அஜீரணம், வயிற்றுக் கோளாறு இவைகளுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். இதே போன்று தயரித்த டிகாக்ஷனில், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடவும்.

இந்தப் பொடியை தேவையான அளவு செய்து வைத்துக் கொண்டு குளிர் காலங்களிலும், தொண்டைக்கட்டு, ஜலதோஷத்தின்போதும் போட்டு சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தேங்காய் சட்னிப் பொடி


 
தேவை:
உளுத்தம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 1 கப்
துவரம் பருப்பு – 1/2  கப்
கொப்பரைத் தேங்காய் – 1
புளி – ஒரு சிறு எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் – 16
பெருங்காயம் - சிறு துண்டு
தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு  -  தேவையான அளவு
வெறும் வாணலியில் பருப்புகளை சிவக்க வறுக்கவும். கொப்பரையைத் துருவி 2 ஸ்பூன் எண்ணெயில் சிவக்க வறுக்கவும். 

மேலும் சிறிது எண்ணெயில் பெருங்காயம், மிளகாய் வற்றலை வறுத்து, பருப்புகள், தேங்காய், மிளகாய் வற்றல், புளி பெருங்காயத்துடன் தேவையான உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். 

இது சாதத்திற்கு பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். பூரி, சப்பாத்திக்கு இது மிக நன்றாக இருக்கும்.

மணத்தக்காளிவற்றல் பொடி

உப்பு போடாமல் காய வைத்த மணத்தக்காளி வற்றல் 1 கப் அளவிற்கு தேவை
மிளகாய் வற்றல் – 10
உளுத்தம் பருப்பு – 6 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
ஜீரகம் – 1 ஸ்பூன்
பெருங்காயம் சிறிது
உப்பு  தேவையான அளவு 
நல்லெண்ணெய்  4 டீஸ்பூன் 
 
செய்முறை 
நல்லெண்ணெயில் மணத்தக்காளி வற்றல், மிளகாய் வற்றல், பெருங்காயம், மிளகு, சீரகத்தை வறுக்கவும்.

உப்புன் வறுத்த மணத்தக்காளி வற்றல், மிளகாய் வற்றல், பெருங்காயம், மிளகு, சீரகத்தை முதலில் அரைத்துக் கொண்டு, பின்பு உளுத்தம் பருப்பைப் போட்டு சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும். 

ஒரு ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் சாதத்தில் ஊற்றி இப்பொடியுடன் பிசந்து சாப்பிட வயிற்றுக் கோளாறுகள், பேதி இவை உடன் சரியாகும். 

மணத்தக்காளி இலையைக் காய வைத்தும், மேற்கூறியபடி பொடி செய்து சாப்பிட வாய்ப்புண், வயிற்றுப் புண் இவை நீங்கும்.

ரவா லட்டு

தேவை
ரவை  -  1 கப்
சர்க்கரை  -  1 1/4 கப்
நெய்  -  1/2 கப்
ஏலப்பொடி  -  1 டீஸ்பூன்
முந்திரி  -  15
திராட்சை  - 10

செய்முறை
5 டீஸ்பூன் நெய்யில் ரவையை சற்று சிவக்க வறுக்கவும்.மிக்சியில் நைசாக அரைத்து சலிக்கவும்.
சர்க்கரையையும்  மிக்சியில் பொடி செய்து சலிக்கவும். ரவை மாவுடன் சர்க்கரைபொடி, ஏலப்பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.

2 டீஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து அத்துடன் சேர்த்து, நெய்யை நன்கு சுடவைத்து மாவில் விட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

விருப்பமானால் அரை கப் தேங்காயை நெய்யில் வறுத்து சேர்த்து லட்டு பிடிக்கலாம்.
வித்யாசமான சுவையுடன் இருக்கும்.


கொத்துமல்லி பொடி

ஒரு கப் அளவு பச்சை கொத்துமல்லி தழையை வேர் நீக்கி சுத்தம் செய்து, அலம்பி வெயிலில் நன்கு காய வைக்கவும். 

ஒரு கப் அளவு கொத்துமல்லிக்கு எண்ணெயில் வறுக்க வேண்டிய சாமான்கள்: மிளகாய் வற்றல் – 15
உளுத்தம் பருப்பு – 4 ஸ்பூன்
கடலைப் பருப்பு – 6 ஸ்பூன் 
புளி – கொட்டைப் பாக்களவு
பெருங்காயம் சிறிது
உப்பு தேவையான அளவு
மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு, புளியைப் போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.

நைஸானதும் கொத்துமல்லித் தழையைப் போட்டு அரைக்கவும். கடைசியாக பருப்புகளைப் போட்டு அரைக்கவும். 

பருப்புகளை சற்று கரகரப்பாக அரைக்க வேண்டும். இந்த கொத்துமல்லி பொடி சற்று ஈரப்பசையோடு இருக்கும். பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை வைத்துக் கொள்ளலாம். 

பிசைந்து சாப்பிடவும், தோசை, இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளவும் மிக நன்றாக இருக்கும்.

Sunday 29 May 2016

அசோகா அல்வா

அசோகா ஹல்வா தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் மிக பிரபலமான, ருசியான  இனிப்பு. அதன் செய்முறை எழுதியுள்ளேன்.
தேவை
பயத்தம் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
கோதுமைமாவு - 1/2 கப்
நெய் - 2 கப்
பால்  - 1/2 கப்
ஏலப்பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்
முந்திரி -15
திராட்சை  -  10
சீவிய பாதாம்  - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ  - சில இதழ்கள்.
கேசரி பவுடர் - 4 சிட்டிகை
செய்முறை
பயத்தம் பருப்பை இலேசாக வெறும் வாணலியில் வறுத்து குக்கரில் ஒரு கப் தண்ணீர் மற்றும் பாலுடன் சேர்த்து  நன்கு குழைய வேக வைக்கவும்.

2 ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பை வறுத்து எடுக்கவும்.அதில் மேலும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து  சுடவைத்து,கோதுமை மாவை பொரித்தாற்போல்  வாசனை வரும் வரை வறுக்கவும்.

ஒரு வாணலியில் வெந்த பயத்தம்பருப்பு போட்டு நன்கு மைய மசிக்கவும். பருப்பு அரை வேக்காட்டில் இருக்கக் கூடாது. அதனுடன் பொரித்த கோதுமை மாவு சேர்த்து நன்கு கிளறவும்.

இரண்டும் சேர்ந்து கொண்டு கெட்டியானதும் சர்க்கரை சேர்க்கவும்.கேசை சிறிதாக்கி கை விடாமல் கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டும் சமயம் சிறிது சிறிதாக நெய்யை விட்டுக் கிளறவும். கேசரி பவுடர், குங்குமப்பூ சேர்க்கவும்.

கரண்டியில்  ஒட்டாமல் நெய் பிரிந்து நன்கு சுருண்டு வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும்.

விருப்பப் பட்டால் திராட்சை, பாதாம் துண்டுகள் நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.

சுவையான திருவையாறு ஒரிஜினல் அசோகா ஹல்வா வாயில் போட்டால் கரையும்.




Friday 27 May 2016

மட்டர் பனீர்




பனீர்  -  150 கிராம்
பட்டாணி  -  1 கப்
தக்காளி -  2
பெரிய வெங்காயம்  -  2
இஞ்சி  - சிறு துண்டு
பச்சை மிளகாய்  - 2
 பூண்டு - 4 பல்
மிந்திரி விழுது  - 2 டீஸ்பூன்
ஜீரகம்  - 1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி  -  1 டீஸ்பூன்
தனியாபொடி  - 1 1/2 டீஸ்பூன்
காரப்பொடி   - 2  டீஸ்பூன்
கரம்மசாலா  - 1 டீஸ்பூன்
உப்பு  -  தேவையான அளவு
எண்ணெய் -  6 டீஸ்பூன்
வெண்ணெய்  -  3 டீஸ்பூன்
பால்  - 1/2 கப்
கொத்துமல்லி
செய்முறை
பட்டாணியை வேக வைக்கவும். பனீரை சிறு சதுர துண்டுகளாக்கவும். முந்தியை சிறிது வெந்நீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.


3 டீஸ்பூன் எண்ணெயில் இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு வதக்கி, அதில் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
நன்கு வதக்கியதும் அத்துடன் நறுக்கிய தக்காளி சேர்த்து  வதக்கி மிக்சியில் அரைக்கவும்.


வெண்ணையுடன் மீதமுள்ள எண்ணெய் சேர்த்து அதில் அரைத்த தக்காளி, வெங்காய விழுது சேர்த்து நன்கு எண்ணெய் பிரிய வதக்கவும். அதில் மஞ்சள்பொடி, தனியாபொடி, காரப்பொடி, கரம் மசாலா சேர்க்கவும்.


நன்கு சேர்ந்து கொண்டதும் முந்திரி விழுது, பால் மற்றும் தேவையான அளவு நீர் சேர்க்கவும். கொதித்ததும் வெந்த பட்டாணி சேர்த்து கிளறவும்.




எல்லாம் சேர்ந்து கெட்டியானதும், பனீர் துண்டுகளை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்.



பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து மேலே சிறிது வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி, நான், பூரியுடன் பரிமாறவும்.




 


Thursday 26 May 2016

பயத்தம் பருப்பு வடை

தேவை
பயத்தம்பருப்பு – 1 கப்
அரிசி மாவு – 1/2 கப்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் வற்றல்  – 5
இஞ்சி – சிறு துண்டு
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் பயத்தம் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை நன்கு களைந்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் மிளகாய் வற்றல், இஞ்சி, சீரகம் ஆகியவற்றை சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரிசி மாவு, உப்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்துள்ள மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான பயத்தம்பருப்பு வடை ரெடி!!!

ஃப்ரூட் கேசரி

தேவை
ரவை - 1 கப்
பொடியாக நறுக்கிய ஆப்பிள் - 1 /2 கப்
திராட்சை - 50 கிராம் 
அன்னாசி துண்டுகள்  - 1/4 கப்
சர்க்கரை - 11/4  கப்
நெய் - 1/2  கப்
முந்திரி - 10
பால்  - 1/2 கப்
தண்ணீர்  -  1 1/2 கப்
ஏலப்பொடி - 2  சிட்டிகை
குங்குமப்பூ - சில இதழ்கள்.
செய்முறை
ஆப்பிள்,  திராட்சையை  சிறு  துண்டுகளாக்கவும்.அவற்றை 1/2 கப் சர்க்கரையுடன் கலந்து வைக்கவும்.
முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் விட்டு  முந்திரி வறுத்து எடுத்து  ரவையை  சற்று சிவக்க வறுக்கவும்.



அதில் பால் மற்றும் தண்ணீரை சேர்க்கவும். தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ளவும்.இல்லையெனில் கட்டி தட்டிவிடும். கிளறுவது கஷ்டம்.




ரவை நன்றாக வெந்த பிறகு சர்க்கரை மற்றும் பழங்களை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
எல்லாம் சேர்ந்து கொண்டு கெட்டியானதும், நெய்யை விட்டுக் கிளறவும்.





பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தபின் குங்குமப்பூ, ஏலப்பொடி,வறுத்த முந்திரி  சேர்த்து கிளறவும்.இதற்கு கேசரி பவுடர் சேர்க்க தேவையில்லை.



சுவையான  ஃப்ரூட் கேசரி ரெடி. பார்ட்டிகளுக்கு ஏற்ற இனிப்பு இது.
இதில் மாம்பழம், பலாப்பழம் இருந்தாலும் தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி சேர்க்க சுவை அருமையாக இருக்கும்.
அதற்கேற்றவாறு சர்க்கரையை சற்று அதிகமாக சேர்க்கவும்.



அடைமாவு குணுக்கு

முதல் நாளைய அடைமாவு - ஒரு கப் 
கேரட் துருவல் - 1/4 கப்
நறுக்கிய வெங்காயம்  - 1/4 கப்
ஊறவைத்த ரவா - கால் கப்
உப்பு - கால் தேக்கரண்டி
அரிசிமாவு - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு கப்
கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். ரவாவை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். மற்றப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடைமாவுடன் துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம்,ஊற வைத்த ரவா மற்றும் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.
இவற்றை ஒன்றாக கலந்தப் பின்னர் மாவு கெட்டியாக அதனுடன் அரிசிமாவு கலந்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி போடவும்.
இருப்பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும். லேசான புளிப்புடன் குணுக்கு சுவையாக இருக்கும்.
தேங்காய் சட்னி அல்லது தக்காளி ஸாஸ் தொட்டுக் கொண்டு சாப்பிடவும்.

வாழைத்தண்டு பச்சடி

தேவை
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப்,
மாதுளை முத்துக்கள் – கால் கப்,
பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது – ஒன்றரை டீஸ்பூன்,
புளிப்பில்லாத கெட்டித் தயிர் – 2 கப்,
கடுகு – கால் டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை
வாழைத்தண்டை நார் நீக்கி, பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். இல்லையெனில் கருத்து விடும்.பச்சடி செய்யும்போது பிழிந்து போடவும்.
கடுகு, எண்ணெய், கொத்தமல்லி தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் கெட்டியான  தயிரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Wednesday 25 May 2016

முள் தேன்குழல்

தேவை
பச்சரிசி - 4 கப்,
கடலைப் பருப்பு - 3/4 கப்,
பயத்தம் பருப்பு - 11/4 கப்,
எள் - 1/2 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
கட்டி பெருங்காயம் - சிறிதளவு,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
செய்முறை :
எள்ளை நன்றாக சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடித்து உலர்த்தி வைக்கவும்.
சுத்தம் செய்து கழுவி காய வைத்த அரிசி, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் மெஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் உப்பு, பெருங்காயம், வெண்ணெய், எள், சீரகம், தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும்.
 முள் தேன்குழல்  அச்சில் தேவையான மாவைப் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும். பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


காரட் ரைஸ்



சாதம்  - 3 கப் 
பெரிய வெங்காயம் -1
உரித்த பட்டாணி - 1/2 கப்
தாளிக்க
கடுகு -  1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு  -  2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்  -  2
மிளகாய் வற்றல்  -  2
கறிவேப்பிலை 
வறுத்து அரைக்க
பெருங்காயம்  - சிறு துண்டு
தேங்காய்த்துருவல்  -  5 டீஸ்பூன்
தனியா  -  2 டீஸ்பூன்
ஜீரகம்  -  2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்  - 4
கடலைப்பொடி  -  4 டீஸ்பூன்   
எண்ணெய் -  5 டீஸ்பூன்
நெய் -  3 டீஸ்பூன்
உப்பு  -  தேவையான அளவு
செய்முறை
காரட்டை துருவவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் பெருங்காயம், ஜீரகம், தனியா, மிளகாய் வற்றல், தேங்காய்  வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும்.











மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், ப.மிளகாய் தாளித்து, கறிவேப்பிலை தாளித்து அதில் வெங்காயம் வதக்கவும்.



வெங்காயம் வதக்கியதும் அதில் காரட், தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.


நன்கு வதக்கி சேர்ந்து கொண்டதும், கடலைப்பொடி மற்றும் அரைத்தபொடி சேர்த்து நன்கு கலக்கவும்.




அதிலேயே சாதம் சேர்த்து, கேசை சிறிதாக்கி, நன்கு கிளறி ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும். நெய்யில் முந்திரி, கடலை வறுத்து சேர்க்கலாம்.









துளசி புதினா சட்னி

தேவை
துளசி இலைகள் -- 1/2 கப்
புதினா இலைகள் -- 1/4 கப்
கொத்துமல்லி -- சிறு கட்டு
பச்சை மிளகாய் -- 3
இஞ்சி -- சிறு துண்டு
சீரகம் -- 1 டீஸ்பூன்
மிளகு --2 டீஸ்பூன்
தக்காளி --1
உளுத்தம்பருப்பு -- 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் --2 டீஸ்பூன்
கடுகு -- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- கொத்து
உப்பு -- தேவையான அளவு
செய்முறை
எண்ணெயை காய வைத்து அதில் உளுத்தம்பருப்பு,மிளகு, சீரகம் வறுத்து எடுத்து அதிலேயே பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி, புதினாவை வதக்கவும்.
அவற்றுடன் துளசி, கொத்துமல்லி சேர்த்து நைசாக அரைக்கவும்.
எண்ணெயில் கடுகு,கறிவேப்பிலை  தாளித்து கொட்டவும்.
இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ஒரு வித்யாசமான சட்னி.
துளசி இருமல், ஜலதோஷத்திற்கு நல்ல மருந்து.
புதினா  அஜீரணம், வயிற்றுப் பொருமல் போக்கும்.

சாமை பிரியாணி

தேவை
சாமை அரிசி - 2 கப் 
வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டாணி - தலா 1/4 கப்  (நறுக்கியது)
தயிர் - அரை கோப்பை
இஞ்சி, பூண்டு விழுது, புதினா - தேவையான அளவு
சோம்பு, பட்டைப்பொடி - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன் 
தனியாபொடி - 3/4 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 11/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்   
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
நெய்,எண்ணெய் சேர்த்து - 1/4 கப் 
ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 2, பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.
செய்முறை 
சாமியைக் களைந்து ஒரு டீஸ்பூன் நெய்யில் சற்று வதக்கவும்.
குக்கரில் நெய்யைச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்த பொருட்களை, சிவக்க வறுத்துக்கொள்ளவும். 
இதில் சோம்பு, பட்டைப்பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் பொடி, தனியாபொடி, மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும். 
பிறகு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, புதினாவைச் சேர்க்கவும்.  
நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும். 
நறுக்கிய காய்கறிகள், பச்சைப்பட்டாணி சேர்த்து சற்று வதக்கவும்.
தேவையான  உப்புடன் தயிர் மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும், சாமையை சேர்க்கவும்.
ஆவி வந்ததும் வெயிட் போட்டு, குக்கரை சிம்மில் வைத்து, 10 நிமிடத்தில் அணைத்து விடவும்.
ஆறியதும் திறந்து நன்கு கலக்கவும். கொத்துமல்லித் தழையை பொடியாக நறுக்கிப் போடவும்.
நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும்.
ருசியான சாமை பிரியாணி ரெடி.
இதே போன்று வரகு, குதிரைவாலி, தினை அரிசிகளிலும் பிரியாணி செய்யலாம். இவை உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள். அனைத்துக் காய்கறிகளும் சேர்வதால், எல்லாச் சத்துக்களும் கிடைக்கின்றன.

ரவா பட்டன்ஸ்

தேவை
ரவா – 1 கப்
மைதா - ¼ கப்
துருவிய தேங்காய் - ½ கப்
இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய் – 8
எள் – 2 டீஸ்பூன்
வெண்ணெய் – 3 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி – சிறிது
உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை
இதற்கு நைஸான பாம்பே ரவாதான் ஏற்றது. 
மைதாவை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். 
தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாயை நைஸாக அரைக்கவும். 
ரவா, மைதா, அரைத்த விழுது, பெருங்காயம் , வெண்ணெய், உப்பு, சேர்த்து தேவையான நீர் சேர்த்துப் பிசையவும். 
சிறிய சீடையளவு உருட்டி, விரலால் நடுவில் அமுக்கி, தட்டையாக்கிப் பிளாஸ்டிக் பேப்பரில் போடவும். 
பின்பு எண்ணெயில் வேகவிட்டுப் பொன்னிறமாக எடுக்கவும். 
காரப்பொடி போட்டுச் செய்வது போலில்லாமல், இது வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

Monday 23 May 2016

கடலை மாவு லாடு

தேவையான பொருள்கள்:
கடலை மாவு - 250 கிராம்
நெய் - 150 கிராம்
கோவா (இனிப்பில்லாதது) - 100 கிராம்
ஈக்வல் (Artifical Sweetener Equal) - ¼ கப்
ஏலப்பொடி - ¼ டீஸ்பூன்
முந்திரி, திராட்சை, பாதாம் துண்டுகள் 
(
தேவையெனில் சேர்க்கவும்) - தேவையான அளவு

செய்முறை

கடலை மாவை சலித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய்விட்டு முந்திரி, பாதாம், திராட்சையை வறுத்து வைக்கவும். பின்பு, எல்லா நெய்யையும் விட்டு உருகியதும், கடலை மாவைப் போட்டு கைவிடாமல் மிதமான தீயில் வைத்து நன்றாக வறுக்கவும்.

கடலை மாவு நிறம் மாறி, வாசனை வந்ததும், அதில் உதிர்த்த கோவா, வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து, ஈக்வலைச் சேர்க்கவும். அது கரைந்ததும் இறக்கி ஏலப்பொடி சேர்க்கவும். கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்கவும். சுலபமான, சுவையான கடலை மாவு லாடு, சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது!




ட்ரை கலர் பட்டீஸ்

சிகப்பு வண்ணத்திற்கு:
உருளைக் கிழங்கு – 1 கிலோ (வேகவிட்டு மசித்தது)
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை – 1
இஞ்சி
பச்சை மிளகாய் விழுது – 1 டேபிள் ஸ்பூன்
ஆரஞ்சு கலர் – சில துளிகள்
உப்பு – தேவைக்கேற்ப

பச்சை வண்ணத்திற்கு:
பச்சை பட்டாணி (வேகவிட்டு மசித்தது) - ½ கிலோ
இஞ்சி
பச்சை மிளகாய் விழுது – 2 தேக்கரண்டி
எலுமிச்சை – 1 மூடி
சர்க்கரை - ¼ தேக்கரண்டி
பச்சை கலர் – சில துளிகள்
உப்பு – தேவையான அளவு

வெள்ளை வண்ணத்திற்கு
பனீர் - ½ கிலோ
இஞ்சி
பச்சை மிளகாய் விழுது - ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மைதா – 2 தேக்கரண்டி
எண்ணெய் – வேகவிட தேவையான அளவு

செய்முறை


உருளைக் கிழங்கை வேகவிட்டு கட்டிகளின்றி மசித்து அத்துடன், சிவப்பு வண்ணத்திற்குக் கூறப்பட்ட சாமான்களைச் சேர்த்துப் பிசைந்து எலுமிச்சை சாறு, கலர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து 15 உருண்டைகளாக உருட்டவும்.

பச்சைப் பட்டாணியை நீர் சேக்காமல் ஆவியில் வேகவிட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து மற்ற சாமான்களுடன் சேர்த்துப் பிசைந்து 15 உருண்டைகளாக்கவும். இப்போது பச்சை வண்ண உருண்டை ரெடி.

பன்னீரை நன்கு உதிர்த்து மற்ற சாமான்களை சேர்த்துப் பிசைந்து 15 உருண்டைகளாக்கவும்.

முதலில் பச்சை கலர் (பட்டாணி) உருண்டையை சிறிய வட்டமாக்கி அதனுள் பனீர் உருண்டை வைத்து வட்டமாக உருட்டவும்.

கையில் எண்ணெய் தொட்டுக் கொண்டு உருளைக் கிழங்கு (ஆரஞ்சு கலர்) உருண்டையை உள்ளங்கையில் வட்டமாகத் தட்டி அதனுள் பனீர் உருண்டை உள்ளடக்கிய பட்டாணி உருண்டையை வைத்து எல்லா பக்கமும் இழுத்து மூடி போண்டா போல் உருண்டையாக்கவும். கையில் எண்ணெய் தொட்டுக் கொண்டால்தான் ஒட்டாமல் வரும். இது போல் எல்லாவற்றையும் செய்யவும்.

எண்ணெயை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் இந்த போண்டாக்களை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

ஒவ்வொன்றையும் சரிபாதியாக வெட்டி சட்னி அல்லது சாஸூடன் சூடாக பரிமாறவும். இதை பாதியாக வெட்டினால்தான் 3 வண்ணங்களுடன் ‘பட்டீஸ்’ கண்ணைக் கவர்வதோடு, ருசியும் ஸூப்பர்பாக இருக்கும்.

என் குழந்தைகள் மட்டுமல்ல, எந்தக் குழந்தைக்கும் இந்த பட்டீஸ் பிடிக்குமென்பதில் சந்தேகமில்ல!
சத்தான ருசியான டிபன்.

வல்லாரைப்பொடி

தேவை
ஆய்ந்து சுத்தம் செய்த வல்லாரை கீரை – 3 கப்
கடலைப்பருப்பு – 8 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு –4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
புளி – சிறிது
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் – வறுக்க.
செய்முறை:
வல்லாரை கீரையை நன்றாக சுத்தம் செய்து வெய்யிலில் வைத்து  காயவைக்கவும். 
பிறகு, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பருப்புகள், மிளகு, சீராக, பெருங்காயத்தை தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.  புளியையும் வெறும் வாணலியில் வறுக்கவும். 
ஆறியவுடன், முதலில் பருப்பு, மிளகாய், உப்பு, புளி.. ஆகியவற்றை ஒன்றாகப் பொடித்து, கடைசியாக வல்லாரை இலைகளையும் போட்டு பொடித்தெடுக்கவும்.
வல்லாரை ஞாபக சக்திக்கு நல்லது. படிக்கும் குழந்தைகளுக்கு நெய்யுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட சொல்லலாம். மறதிக்கு நல்ல மருந்து.

கடலைப்பொடி


தேவை
வேர்க்கடலை – ஒரு கப்
உளுத்தம்பருப்பு – கால் கப்
கடலைப்பருப்பு – கால் கப்
காய்ந்த மிளகாய் – 6
பெருங்காயம் – ஒரு கட்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
முதலில் வெறும் வாணலியில் வேர்க்கடலையை வறுக்கவும். 
பிறகு எண்ணெயில், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை பொன்னிறமாக வறுக்கவும். 
வறுத்த பருப்புகளை உப்பு கலந்து மிக்ஸியில் பொடிசெய்யவும். கடைசியாக, அதோடு வேர்க்கடலையையும் சேர்த்துப் பொடிக்கவும். 
கறிவகைகள், கூட்டு செய்யும்போது, இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் போட்டால் வித்தியாசமான டேஸ்ட்டில் ருசியாக இருக்கும்

வாழைத்தண்டு கோஸ் மோர்க்கூட்டு

தேவை
முட்டைகோஸ்  கால் கிலோ
வாழைத்தண்டு  (பெரிதாக) 1
மிளகு  10
மிளகாய் வற்றல் 2
புளிக்காத தயிர்  ½  கப்
கடுகு  1 டீஸ்பூன்
சீரகம்  1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு  1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
தேங்காய்த் துருவல்  4 டேபிள்டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய்  2 டீஸ்பூன்
உப்பு  தேவையான அளவு
செய்முறை

கோஸை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாழைத்தண்டின் மேல்பட்டைகளை உரித்து, தோல் சீவி, வில்லை வடிவமாக நறுக்கி, நார் எடுத்து, பொடியாக நறுக்கவும்.
இதை கோஸுடன் சேர்த்து, உப்பு போட்டு வேகவிடவும்.
மிளகு, மிளகாய் வற்றல், தேங்காய்த் துருவல், சீரகம் ஆகியவற்றை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் விழுதாக அரைத்து, வேகவைத்த கோஸ் வாழைத்தண்டுடன் சேர்க்கவும்.
இதனை சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கி, தயிர் விட்டு கலக்கவும்.
மீதமுள்ள தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து சேர்க்கவும்.
கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
வாழைத்தண்டு பித்தப்பையில் உள்ள கற்களை நீக்கும். நார்ச்சத்து உள்ளதால் இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. சூடான சாதத்தில் இந்த மோர்க்கூட்டு சேர்த்து, பொரித்த அப்பளம் தொட்டு சாப்பிட்டால்.. அருமையாக இருக்கும்.

முடக்கத்தான்பொடி

தேவையானவை:
முடக்கத்தான் இலை – 2 கப் 
உளுத்தம்பருப்பு – 8 டீஸ்பூன்

துவரம்பருப்பு – கால் கப்

கட்டிப் பெருங்காயம் – சிறு துண்டு
மிளகு - 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முடக்கத்தான் இலைகளை நன்றாக சுத்தம் செய்து ஈரம் போக காயவைக்கவும்.
வாணலியில் தலா கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பருப்புகளை தனியே வறுத்தெடுக்கவும். 
முடக்கத்தான் இலைகளையும் வெறும் வாணலியில் சிறிய தீயில் வைத்து நன்றாக வதக்கவும். 
ஆறியவுடன், முதலில் பருப்பு, உப்பு, மிளகாய் வகைகளை ஒன்றாகப் பொடித்து, கடைசியாக முடக்கத்தான் இலைகளையும் போட்டுப் பொடித்து எடுக்கவும். 
வாயுக் கோளாறு, முழங்கால் வலிக்கு மிகச் சிறந்த நிவாரணி இந்தப் பொடி. சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம்.

மொறு மொறு தப்பட்

தேவையான பொருட்கள்:
மைதா - 1¼ கப்
உப்பு - தேவையான அளவு
கடலை மாவு - ¼ கப்
மிளகுப் பொடி - ¼ டீஸ்பூன்
சீரகப் பொடி - ½ டீஸ்பூன்
உருகிய நெய் – 4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

மைதாவை ஒரு துணியில் கட்டி, இட்லித் தட்டில் வைத்து குக்கரில் வெயிட் போடாமல் 10 நிமிடங்கள் வைத்து, ஆறியதும் உதிர்த்து, அத்துடன் உப்பு, நெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.

கடலை மாவு, மிளகுப்பொடி, சீரகப்பொடி, உப்பு, நெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். இரண்டையும் 15 நிமிடங்கள் ஊறியதும், மைதாக் கலவையை பெரிய உருண்டைகளாகவும், கடலை மாவுக் கலவையை சிறு உருண்டைகளாகவும் உருட்டிப் போடவும்.

மைதா உருண்டையை பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி, சிறிய தட்டையாகச் செய்து, அதனுள் கடலை மாவு உருண்டையை வைத்து, நன்கு மூடி, மறுபடியும் உருட்டி, சிறிய தட்டைகளாகத் தட்டி, அதில் ஃபோர்க்கினால் சில துளைகள் போட்டு, எண்ணெயில் பொன்னிறமாக வேகவிடவும்.


வித்தியாசமான சுவையுடன், இந்த ‘மொறு மொறு தப்பட்’, டீ, காபியுடனும், தனியே சாப்பிடவும் ‘டேஸ்டி’யான நொறுக்ஸ்!

கொள்ளு ரசம்

தேவை
கொள்ளு - ¼ கப்
புளி – சிறு எலுமிச்சை அளவு
உப்பு, பெருங்காயம்
ரசப்பொடி - 1½ டீஸ்பூன்
தக்காளி – 1
நெய், கடுகு, கொத்துமல்லி
மிளகாய் வற்றல் – 2

செய்முறை
கொள்ளை துளி மஞ்சள் பொடியுடன் சேர்த்து குக்கரில் வேகவிடவும். புளியை 2 கப் நீரில் கரைத்து அதில் பெருங்காயம், உப்பு, ரசப்பொடி, தக்காளி போட்டு கொதித்து வற்றியதும், வேகவிட்ட கொள்ளை வேண்டிய நீருடன் சேர்த்து விளாவி விட்டு, நுரைத்து வந்ததும் இறக்கி, நெய்யில் கடுகு, மிளகாய் வற்றல் போட்டு தாளித்து கொத்துமல்லி போடவும்.


பத்திய ரசம்

உடல் நிலை சரியில்லாத போதும், அஜீரணம் போன்ற வயிற்று உபாதைகளின் போதும் பருப்பு சேர்த்து ரசம் செய்தால் எளிதில் ஜீரணம் ஆகாது. அச்சமயங்களில் இந்த ரசம் வயிற்றுக்கு நல்லது. தக்காளி சேர்க்கக் கூடாது.

தேவை
புளி – எலுமிச்சை அளவு
உப்பு, கறிவேப்பிலை
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
தனியா - 1½ டீஸ்பூன்
மிளகு - ½ டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4
சீரகம் – 1 டீஸ்பூன்
நெய், கடுகு

செய்முறை


புளியை 2 கப் நீரில் கரைத்து உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்க விடவும். கடலைப் பருப்பு, தனியா, மிளகு, மிளகாய் வற்றல் போன்றவற்றை எண்ணையில் சிவக்க வறுத்து அரைத்து சேர்த்துக் கொதிக்க விடவும். சீரகம், கருவேப்பிலையை நீரில் ஊறவைத்து அரைக்கவும். ரசம் புளி வாசனை போக கொதித்து வற்றியதும், சீரகம், கருவேப்பிலை அரைத்த விழுதில் மேலும் நீர் சேர்த்து, விளாவி நுரைத்து வந்தபின் இறக்கி நெய்யில் கடுகு தாளிக்கவும்.

தனியா ரசம்


தேவை

புளி – 1 சிறு எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு – 3 டீஸ்பூன்
உப்பு, பெருங்காயம், நெய், கடுகு, தக்காளி
தனியா – 2 டீஸ்பூன்
கொத்துமல்லி
ரசப்பொடி - 1½ டீஸ்பூன்

செய்முறை

இதற்கு துவரம் பருப்பை வேகவிடக்கூடாது. துவரம் பருப்பு, தனியாவை தண்ணீரில் சற்று ஊறவைத்து அரைக்கவும். புளியை 2 கப் நீரில் கரைத்து உப்பு, பெருங்காயம், தக்காளி, ரசப்பொடி போட்டுக் கொதிக்க விட்டு, நன்கு கொதித்து வாசனை போனபின் துவரம் பருப்பு, தனியா அரைத்த விழுதுடன் தேவையான நீர் சேர்த்து விளாவி நுரைத்து வந்ததும், நெய்யில் கடுகு தாளித்து மல்லி,கறிவேப்பிலை  கிள்ளிப் போடவும்.

மோர் ரசம்

காய்ச்சல் போன்ற சமயங்களில் தயிர், மோர் ஊற்றிக் கொள்ள முடியாத நேரங்களுக்கு ஏற்ற ரசம் இது.

2 கப் புளித்த மோரை நீர்க்கக் கரைத்துக் கொண்டு அதில் தேவையான உப்பு, 1 டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கட்டியின்றி கரைக்கவும். எண்ணெயில் அல்லது நெய்யில் 1 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் ஓமம், 2 அல்லது 3 பச்சை மிளகாய் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துத் தாளித்து மோரில் கலந்து, சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். கொத்து மல்லியைக் கிள்ளிப்போட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

சீஸ் பொட்டேடோ டிகியா

தேவையானவை
வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு--1 கப்,
பச்சைமிளகாய்--4,
மஞ்சள்தூள், கரம்மசாலா --தலா அரை டீஸ்பூன்,
சீஸ்--சில துண்டுகள்,
பொடியாக சீவிய முந்திரி, பிஸ்தா (கலந்தது)--இரண்டு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய்,உப்பு-- தேவையான அளவு.

செய்முறை :

மசித்த உருளைக் கிழங்குடன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு, மஞ்சள்தூள் , கரம்மசாலா தூள் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு பிசையவும். அதிலிருந்து கொஞ்சம் எடுத்து சிறு உருண்டையாக உருட்டி, நடுவில் குழியாக்கி அதில் சிறிய சீஸ் துண்டு வைத்து,அதன்மேல் பொடியாக சீவிய முந்திரி, பிஸ்தா தூவி நன்கு மூடி விடவும். இதேபோல் ஒவ்வொரு உருண்டையும் தயார் செய்யவும். கடைசியில் எண்ணையைக் காய வைத்து உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சாஸ் அல்லது சட்னியுடன் பரிமாறவும்.