Saturday 30 April 2016

மண்ணாங்கட்டி

தேவை                        
கொழுக்கட்டை  மாவு                              
இட்லி  மிளகாய்ப்பொடி
உப்பு
பெருங்காயப்பொடி
தேங்காய்த்துருவல்
எண்ணை
கடுகு



செய்முறை

வெல்லக்  கொழுக்கட்டைக்கு  தயார்  செய்த  மேல்மாவு  அதிகமாகி  விட்டால்  அத்துடன் தேவையான  அளவு  இட்லி மிளகாய்ப்பொடி,  உப்பு,  பெருங்காயப்பொடி,  தேங்காய்த்துருவல்  சேர்த்து  நன்கு  பிசையவும்.



அதை  சிறு  உறுண்டையாக  உருட்டி  தட்டையாக்கி  நடுவில்  கட்டை  விரலால்  அமுக்கி  விடவும்.

அவற்றை  இட்லி  வேக  வைப்பது  போல்  ஆவியில்  வேக விடவும்.



எண்ணையில்  கடுகு  தாளித்து,  அதில்  மண்ணாங்கட்டிகளைப்  போட்டு  ரோஸ்ட்  செய்யவும்.  இனிப்பான  கொழுக்கட்டைக்கு  இந்த மண்ணாங்கட்டி  நல்ல  மேட்ச்!

கடலை உருண்டை


                             
                                                            
தேவை
நிலக்கடலை--- 2 கப்
வெல்லம்--- 1 கப்

செய்முறை

கடலையை  வறுத்து  ஒரு  முறத்தில்  போட்டுத்  தேய்த்து  தோலி  நீக்கி  இரண்டாக  உடைத்துக்  கொள்ளவும். அல்லது  கடையில்  தயாராகக்  கிடைக்கும்  உப்பு  சேர்க்காத  கடலையை  வாங்கி  சுத்தம்  செய்து  லேசாக  சூடு  வர  வறுக்கவும்.
 


வெல்லத்துடன்  1/4  கப்  நீர்  சேர்த்து  பாகு  வைக்கவும்.  வெல்லம்  கரைந்ததும்  வடிகட்டி  மண்  நீக்கவும்.  மீண்டும்  அடுப்பில்  வைத்து  கெட்டி  கம்பிப்  பாகு  ஆக்கவும்.


பாகை  தண்ணீரில்  போட்டால்  கரையாமல்  உருட்டும்  பதம்.

பாகை  இறக்கி  கடலையில்  விட்டு  ஒரு  கரண்டிக்  காம்பால்  கிளறவும்.
 


சற்று  ஆறியதும்,  கையில்  சிறிது  அரிசி  மாவைத்  தொட்டுக்கொண்டு  சிறிய  உருண்டைகளாகப்  பிடிக்கவும்.  


ஆறியதும்  எடுத்து  வைக்கவும். சத்தான  இந்த  கடலை  உருண்டையை  குழந்தைகள்  விரும்பிச்  சாப்பிடுவார்கள்!

பனீர் கோஃப்தா


தேவை கோஃப்தாவிற்கு...
குலாப்ஜாமூன் மிக்ஸ் - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 2
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்க
பனீர் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
பிரெட் துண்டுகள் - 2 (ஓரங்களை நீக்கிவிட்டு உதிர்க்கவும்.)
எண்ணெய் - பொரிப்பதற்கு.
க்ரேவிக்கு..
சீரகம் - 1 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், தனியாபொடி - 1 டீஸ்பூன், மிளகாய்ப்பொடி  - 11/2 டீஸ்பூன், கரம் மசாலா - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, தக்காளி - 2, காரட் துருவல் - 1/4 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப், நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை
உருளைக்கிழங்கை வேக விடவும். வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு,வெங்காயம்  வதக்கவும்.
அத்துடன்  குலாப்ஜாமூன் மிக்ஸ், வெந்த உருளை, உப்பு, மிளகாய்ப்பொடி, துருவிய பனீர், நறுக்கிய பச்சை மிளகாய், பிரெட் துகள் எல்லாம் சேர்த்துப் பிசைந்து, உருண்டைகளாக உருட்டி, கொதிக்கும் எண்ணெயில் பொரிக்கவும். கோஃப்தா தயார்.
தக்காளியை கொதிக்கும் வெந்நீரில் போட்டு தோலி  நீக்கி, அரைத்து கூழாக்கவும்.
வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து இஞ்சி பூண்டு விழுது,தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கி, அதிலேயே வெங்காயம்,காரட் துருவல் எல்லாவற்றையும் தனித்தனியே போட்டு வதக்கி அதில் தனியாபொடி, மிளகாய்ப்பொடி, கரம் மசாலா, உப்பு சேர்த்து 11/2 கப் நீர் விட்டுக் கொதிக்க விடவும்.
எல்லாமாகச் சேர்ந்து கொதித்து கெட்டியானதும்  இறக்கி மல்லித்தழை தூவி பொரித்த கோஃப்தாக்களை இதில் சேர்க்கவும்.
பனீர் கோ ஃப்தா சப்பாத்தி, ரொட்டியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Friday 29 April 2016

ரவா சேமியா பொங்கல்


தேவை 
வறுத்த ரவா -- 1கப்
வறுத்த சேமியா -- 1/2 கப்
பயத்தம்பருப்பு -- 1/2 கப்
இஞ்சி --  சிறுதுண்டு
முந்திரி -- 10
திராட்சை -- 10
தேங்காய்ப்பால் -- 1/2 கப்
கறிவேப்பிலை -- 1 கொத்து
மிளகு -- 1/2 டீஸ்பூன்
மிளகு சீரகப்பொடி -- 1 டீஸ்பூன்
நெய் -- 4 டீஸ்பூன்
உப்பு -- தேவையான அளவு

செய்முறை
கடைகளில் ரோஸ்டட் ரவாவும், சேமியாவும் கிடைக்கும். அவற்றை உபயோகித்து பொங்கல் செய்யலாம்.
பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். குக்கரில் வேகவிடவும்.
2 கப் தண்ணீர்,  தேங்காய்ப் பாலுடன் சேர்த்து கொதிக்க விட்டு அதில் சேமியாவை சேர்க்கவும். முக்கால் அளவு வெந்ததும், அத்துடன் ரவாவை சேர்த்து வேகவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
இரண்டையும் சேர்த்து வேகவிட்டால் ரவை அதிகம் வெந்து கூழாகி விடும்.
வாணலியில் நெய்யை விட்டு இஞ்சி,மிளகு, முந்திரி, மிளகு சீரகப்பொடி, கறிவேப்பிலை போட்டு வதக்கி  பொங்கலில் கொட்டி நன்கு கலக்கவும்.
சட்னி, கொத்சுடன் பரிமாறவும்.








 



Thursday 28 April 2016

தக்காளி தோசை


தேவை
புழுங்கலரிசி – 1 ½ தம்ளர்
பச்சரிசி – ½ தம்ளர்
துவரம்பருப்பு – 2 மேஜைக்கரண்டி
தக்காளி – நடுத்தர அளவில் 4 (அ) 5
மிளகாய் வற்றல் –  4 (அ) 5
இஞ்சி – 1 சிறு துண்டு
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:-

அரிசிகளையும், துவரம்பருப்பையும் ஊற வைக்க வேண்டும். இவைகள் நன்கு ஊறிய பின் இத்துடன் தக்காளி, மிளகாய்வற்றல், இஞ்சி, பெருங்காயம், உப்பு,கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
சூடான தோசைக்கல்லில் அடை மாதிரி சற்று கனமாக  சுற்றிலும் எண்ணெய் விட்டு வார்த்து எடுக்கவும்.
தேங்காய் சட்டினியில் போட்டுக்கடலைக்கு பதிலாக வேர்க்கடலையை சேர்த்து அரைத்து இந்த தோசைக்குத் தொட்டுச் சாப்பிட்டால் வித்யாசமான ருசியாக இருக்கும்.

Tuesday 26 April 2016

மசாலா பப்பட்




தேவை
பெரிய சைஸ் மிளகு அப்பளம்
வெங்காயம்
பச்சை குடை மிளகாய்
சிகப்பு குடை மிளகாய்
மஞ்சள் குடை மிளகாய்
துருவிய கேரட்
சாட் மசாலா பொடி
ஓமப்பொடி
எலுமிச்சம் பழ ரசம்
 உப்பு
செய்முறை
முதலில் வெங்காயம், குடை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
கேரட்டை துருவி வைத்துக்கொள்ளவும்.
மசாலா பப்பட் பரிமாறுவதற்கு முன் மிளகு அப்பளத்தை மைக்ரோவேவ் அவனில் வைத்தோ (அ) அப்பளத்தின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி தவாவில் ரோஸ்ட் செய்தோ எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை, சிகப்பு, மஞ்சள் மிளகாய் இவற்றை போட்டு இரண்டு சிட்டிகை உப்பு , எலுமிச்சம் பழ ரசம் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
பரிமாறும் முறை
ரோஸ்ட் செய்த அப்பளத்தின் மேல் உப்பு, எலுமிச்சம்பழ ரசம் கலந்து வைத்துள்ள வெங்காயம், குடைமிளகாய் கலவையை பரவலாக தூவி அதன் மேல் கேரட் துருவலையும், சாட் மசாலா பொடியையும் தூவி கடைசியாக  ஓமப்பொடி மேலே உதிர்த்து உடனடியாக பரிமாறவும்.
மேலும் மேலும் சாப்பிட தூண்டும் மற்றும் நினைத்த உடனே சுலபமாக செய்து சாப்பிட கூடிய இந்த ருசியான மசாலா பப்பட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒரு உணவாகும்.
மிளகு அப்பளத்தில் ஏற்கனவே உப்பும் , மிளகின் காரமும் இருப்பதினால் வெங்காயம், குடை மிளகாய் கலவையில் சிறிதளவு அளவு உப்பு சேர்த்தாலே போதுமானது.
விருப்பபட்டால் வெள்ளரிக்காய், தக்காளி இவற்றையும் பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த காய்கறிகளில் எல்லாம் நீரின் தன்மை அதிகம் இருப்பதினால் சாப்பிடுவதற்கு முன் அப்பளத்தின் மேல் தூவி உடனடியாக பரிமாறி விட வேண்டும்.






Monday 25 April 2016

கிரீன்லஸ்ஸி

வெள்ளரி லஸ்ஸி


தேவையான பொருட்கள்:
நறுக்கின பிஞ்சு வெள்ளரிக்காய் - ஒரு கப்
புளிப்பில்லாத தயிர் - ஒரு கப்
பால் - 1/2 கப்
பனை சர்க்கரை -1/2 கப்
ஏலப்பொடி - சிறிது
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை :
வெள்ளரிக்காய் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
மிக்ஸியில் இந்த வெள்ளரிக்காய் துண்டுகளை போட்டு தயிர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
அரைத்த வெள்ளரிக்காயுடன் சீனி, ஏலப்பொடி  மற்றும் உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுக்கவும். பாலை சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றவும்.
உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வெள்ளரி லஸ்ஸி ரெடி.இதனை ஃ பிரிட்ஜில் வைத்தோ அல்லது இதனுடன் ஐஸ்கட்டிகள் சேர்த்தோ  ஜில்லென்று பருகலாம். இரு இதழ்கள் குங்குமப்பூ சேர்த்தால் சுவை கூடும்.
பனங்கற்கண்டு உடலுக்கு நல்லது. இல்லையெனில் அதே அளவு சர்க்கரை சேர்க்கலாம்.

வாழைப்பழ லஸ்ஸி


தேவை
வாழைப்பழம் - 2
புளிக்காத தயிர் - 3/4 கப்
பால் - 1 கப்
பனங்கற்கண்டு பொடி - 1/2 கப்
ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன்
குங்குமப்பூ - சில இதழ்கள்
செய்முறை :
அனைத்து பொருள்களையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அடிக்கவும்.லஸ்ஸி கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
இதை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து பரிமாறவும்.
பரிமாறும் முன்பு ஏலப்பொடி, குங்குமப்பூ போட்டால் பார்க்க அழகாகவும், சுவை அபாரமாகவும் இருக்கும்.
மிக்சியில் அடிக்கும் போது இவற்றுடன் ஐஸ் கட்டிகள் சேர்த்து அடித்தால் உடனே பரிமாறலாம்.


கார சட்னி


தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 12 (அ) பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 12
தக்காளி – 1
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க
எண்ணெய் – 2  மேசைக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
செய்முறை:
சின்ன வெங்காயம், பூண்டு ,தக்காளி, மிளகாய்த்தூள், தேவையான உப்பு அனைத்தையும் சேர்த்து பச்சையாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பச்சை வாசனை போகும் வரை (10-15 நிமிடங்கள் ) நன்றாக வதக்கவும்.
இப்பொழுது சுவையான கார சட்னி தயார்.

பைனாப்பிள் கேசரி


தேவை
ரவை - 1 கப்
சர்க்கரை - 2 கப்
பைனாப்பிள் துண்டுகள் சில
முந்திரி - 10
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
திராட்சை - 10
நெய் - 100 கிராம்
கேசரி பவுடர் - சிறிதளவு
செய்முறை
பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு(ஒரு மடங்கு ரவைக்கு 2 மடங்கு தண்ணீர்) கொதிக்க விடவும்.

வாணலியில் 3 தேக்கரண்டி நெய்யில் மிந்திரி, திராட்சை வறுத்து எடுத்து அதிலேயே பைனாப்பிளை சிறு துண்டுகளாக்கி நன்கு வதக்கி எடுக்கவும்.
மேலும் 2 தேக்கரண்டி நெய்யில் ரவையை சற்று சிவக்க வறுக்கவும்.
அதில் கொதிக்க வைத்த நீரை விட்டு கெட்டியாகக் கிளறவும். அத்துடன் வதக்கிய பைனாப்பிள் துண்டுகளும் சேர்க்கவும். ரவை வெந்தவுடன் சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
சேர்ந்து கெட்டியானதும் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.
கேசரி பவுடர்,ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விடவும். வறுத்த மிந்திரி, திராட்சை சேர்த்து ஒட்டாமல் வந்ததும் இறக்கவும்.
கேசரியை கிண்ணத்தில் போட்டோ, நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி துண்டங்களாக்கியோ சாப்பிடலாம்.


சில குறிப்புகள்
வெந்நீரை விட்டு கேசரி செய்தால் கட்டி தட்டாமல் வரும்.

ரவை வெந்ததை தெரிந்து கொள்ள, ரவையைத் தொட்டால் பிசுக்கென்று இல்லாமல், கையில்  ஒட்டாமல் வந்தால் அது வெந்ததன் அடையாளம்

ரவை வெந்ததா என்று தொட்டு தெரிந்துகொண்ட பின் சர்க்கரை சேர்ப்பது நலம்.

தேவையான நெய்யை முதலிலேயே சேர்த்துவிட்டால் சரியான பதத்தில் வந்துவிடும். இல்லாவிட்டால் நெய்யை விட விட அது உறிஞ்சிக்கொண்டே போகும், கடைசியில் கக்கும் - இதைத் தவிர்க்கலாம்.

 தண்ணீரில் ரவையை வேகவிடாமல் கொதிக்கும் நீருடன் அரை கப்  பாலும் சேர்த்தால் பால்கோவா வாசனையுடன் இருக்கும்.

 தேங்காய் பால் வாசனையுடன் கேசரி வேண்டுமானால் கடைசியில் ரெண்டு ஸ்பூன் கெட்டி தேங்காய் பால் சேர்க்கலாம்.

பைனாப்பிள் சேர்க்க விருப்பமில்லையெனில், ரோஸ் எசன்ஸ் சேர்த்தால் வித்யாசமான மணம்,  சுவையில் இருக்கும்.



காராபூந்தி


தேவை
கடலைமாவு....2கப்
அரிசிமாவு.....3/4 கப்
காரப்பொடி.....3-4 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி....சிறிது
சோடா உப்பு....2 சிட்டிகை
உப்பு....தேவையான அளவு
விழுது நெய்.....3டேபிள்ஸ்பூன்
மிந்திரி.....15
கறிவேப்பிலை....1 கொத்து
வேகவிட எண்ணை
செய்முறை
கடலைமாவு முதல் நெய் வரை அனைத்தையும் கலந்து தேவையான நீர் சேர்த்து கெட்டியாகக் கலக்கவும்.
எண்ணையைக் காய வைத்துஅதில்  ஒரு கரண்டி சூடான எண்ணையை மாவில் விட்டுக் கலந்து,  பூந்தி தேய்க்கும் ஜாரணியை வாணலிக்கு  மேல் பிடித்து அதில் மாவை விட்டு கரண்டியால் வேகமாகத் தேய்க்கவும்.
நன்கு வெந்ததும் அதனை  எடுத்துவிட்டு அடுத்த ஈடு போடவும்.
நெய்யில் மிந்திரி, கறிவேப்பிலையை வறுத்து சேர்த்து நன்கு கலக்கவும்.
இதையே காரப்பொடி சேர்க்காமல் செய்து 2 தேக்கரண்டி மிளகுப்பொடி சேர்த்து கலக்கலாம்.

ரவா - கேரட் லட்டு


தேவையான பொருள்கள்:
பாம்பே ரவை --1 கப்
தேங்காய் துருவல் -- 1 கப்
கேரட் துருவல் -- 1 கப்
சர்க்கரை --- 2 கப்
ஏலப்பொடி --1/2 டீஸ்பூன்
நெய் --- 6 டேபிள் ஸ்பூன் 
முந்திரி பருப்பு  -- 15
திராட்சை --10
செய்முறை:
முதலில் வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ரவையை போட்டு நிறம் மாறாமல் வறுத்தெடுத்து, சற்று கரகரப்பாக அரைக்கவும். சர்க்கரையை பொடிக்கவும். 2 டீஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுக்கவும்.
வாணலியில் மீதியுள்ள நெய்  விட்டு அதில்  தேங்காய் துருவல், கேரட் துருவல், ஏலக்காய் தூள் இவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கிளறி கடைசியில் முன்பே வறுத்து அரைத்து வைத்துள்ள ரவையையும், சர்க்கரைப் பொடி  சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பை அணைத்து விடவும். இக்கலவையை மிக்சியில் விப்பரில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும்.கலவை சிறிது ஆறியதும் கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் போதே லட்டுகளாக பிடித்து வைக்கவும்.
நல்ல கலருடன் கூடிய, சுவை மிகுந்த குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ரவா - கேரட் லட்டு சுவைக்க தயார். 
குறிப்பு :
கேரட்டிலும் இனிப்பு தன்மை இருப்பதால் சர்க்கரையை அவரவர் ருசிக்கேற்ப பார்த்து சேர்த்துக்கொள்ளவும்.

பனீர் போளி

பச்சை மணத்தக்காளிக்காய் குழம்பு

Saturday 23 April 2016

நட்ஸ் பக்கோடா


தேவையான பொருட்கள்:
முந்திரி பருப்பு - 25கிராம்
பாதாம் பருப்பு - 20 கிராம்
கடலை மாவு - 100கிராம்
அரிசி மாவு - 50கிராம்
வெங்காயம் பெரியது- 2
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
இஞ்சி -  1 சிறுதுண்டு
சமையல் சோடா - 1சிட்டிகை
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு தேவையான அளவு
செய்முறை:
முந்திரி  பருப்பை சிறிய துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.பாதாமை வெந்நீரில் ஊறவைத்து சிறு துண்டுகளாக்கவும்.
வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, இவற்றை மிக்ஸில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சமையல் சோடா, உடைத்த முந்திரி, பாதாம்  பருப்பு, வெங்காயம்,  இவற்றுடன் மிக்ஸியில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
சிறிது எண்ணெயை சூடாக்கி கலவையில் கொட்டவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் பொறிப்பதற்கு தேவையான எண்ணெயை சூடாக்கவும்.
மாவு கலவை சிறிது எடுத்துக் கொண்டு பிசிறினால் போல் காய்ந்த எண்ணெயில் போட்டு பொறிக்கவும். சிவந்தவுடன் எடுத்து வடிய விடவும்.
இனிமையான மாலை நேர தேநீருக்கு மொறு மொறு முந்திரி பக்கோடா ரெடி! 



Thursday 21 April 2016

ரவா கார அடை

சேமியா பிரதமன்

அழகர் கோயில் தோசை

இது அழகர் கோயில் ஆலயத்தில் பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படும் தோசை.

தேவை
ப.அரிசி...1 கப்
பு.அரிசி....1/2 கப்
கருப்பு உளுந்து....1 கப்
மிளகு பொடி....2 டீஸ்பூன்
சுக்குப்பொடி.....1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்....2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை
உப்பு...தேவையான அளவு
நெய்...தோசை வார்க்க

செய்முறை
அரிசி, பருப்புகளை 2 மணி நேரம் தனித்தனியாக ஊற வைக்கவும்.

இதற்கு கண்டிப்பாக கருப்பு உளுத்தம் பருப்புதான் தேவை.

அரிசிகளை சற்று கரகரப்பாக கெட்டியாக அரைக்கவும்.

உளுந்தை அதிகம் களையாமல் ஓரளவு தோலியுடன் நைஸாக அரைத்து அரிசிமாவுடன் சேர்த்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.




ஐந்து அல்லது ஆறு மணி நேரம் கழித்து மிளகு பொடி, சுக்குப் பொடி, கறிவேப்பிலை சேர்த்து  தோசை வார்க்கவும்.




இதற்கு நெய் விட்டு வார்த்தால்தான் நன்றாக இருக்கும்.




சாம்பார், மிளகாய் பொடியுடன் சாப்பிட அருமையாகஇருக்கும்.




பூண்டு வெங்காய காரக் குழம்பு


தேவையான பொருட்கள்:
சாம்பார் வெங்காயம் -  15
பூண்டுப்பற்கள் - 8
தக்காளி - 1
புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு -  தேவைக்கேற்றவாறு
வறுத்தரைக்க:
காய்ந்த மிளகாய் - 5 முதல் 6 வரை
தனியா - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கச கசா - 1 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
தாளிக்க:
நல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறுதுண்டு
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
புளியை தண்ணீரில் ஊற வைத்து, 2 கப் அளவிற்கு புளி தண்ணீரை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தோலுரித்துக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, வறுத்தரைக்க கொடுத்துள்ள பொருட்களை, தனித்தனியாக சிவக்க வறுத்தெடுத்து, சற்று ஆற விட்டு, நன்றாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
அடி கனமான ஒரு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணையை சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும் அதில் கடுகு போட்டு, அது வெடித்தவுடன், உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் தக்காளித்துண்டுகளையும், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து, தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும்.
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள விழுதினைச் சேர்த்துக் கிளறி,  புளித்தண்ணீரைச் சேர்த்து, நன்றாகக் கலக்கி  கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு  கொதித்து, சற்று கெட்டியானவுடன், இறக்கி வைக்கவும்.
இஞ்சி, பூண்டு சுவையுடன் சற்று காரமான இந்தக் குழம்பு, குளிர் காலத்திற்கு மிகவும் ஏற்றது.
பூண்டு பிடிக்காதவர்கள் வெங்காயம் மட்டும் சேர்த்து செய்யலாம்.


Wednesday 20 April 2016

ஃப்ரூட் பாசந்தி


தேவையான பொருட்கள்:
பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்
பாதாம் மிக்ஸ் - 4 தேக்கரண்டி
(மிக்ஸுக்கு பதிலாக 6 பாதாம்களை வெந்நீரில் ஊற வைத்து தோலி நீக்கி பாலில் அரைத்து சேர்க்கவும்.)
ஆப்பிள், வாழைப்பழம் - தலா 1
செர்ரிப் பழம் - 4
மாதுளை முத்துக்கள - சிறிது
உலர்ந்த திராட்சை -10,
வறுத்த முந்திரிப்பருப்பு - 10
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
குங்குமப்பூ...சில இதழ்கள்
செய்முறை :
ஆப்பிள், வாழைப்பழத்தை பொடியாக நறுக்கவும்.
பாலை பாதியளவுக்கு காய்ச்சி சர்க்கரை சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து, பாதாம் மிக்ஸ் சேர்த்து பாதியாகச் சுண்டக்காய்ச்சி இறக்கவும்.
குங்குமப்பூ சேர்க்கவும்.
ஆறியதும், நறுக்கிய ஆப்பிள், வாழைப்பழம், உலர் திராட்சை, வறுத்த முந்திரி, செர்ரிப்பழம்,மாதுளை முத்துக்கள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடவும்.
பாலும், பழமும் கலந்து வாசனையும், டேஸ்டும் அபாரமாக இருக்கும்.
குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.

ரவா வாழைப்பழ அப்பம்


தேவையான பொருட்கள்
பழுத்த வாழைப்பழம் -2
ரவை-1/2கப்
மைதாமாவு-1/4கப்
சர்க்கரை -1/4கப்
பேக்கிங் சோடா-2சிட்டிகை
ஏலக்காய்(விரும்பினால்)-1
எண்ணெய் -பொரிக்க
செய்முறை
நன்றாகப் பழுத்த வாழைப்பழம் தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.சர்க்கரையைப் பொடியாக்கவும்.
அதனுடன் ரவை-மைதா-பேக்கிங் சோடா-சர்க்கரை-ஏலக்காய்ப் பொடி இவற்றை சேர்த்து கலந்து தேவையான தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
இந்தக் கலவை குறைந்தது 2 மணி நேரங்களாவது ஊறவேண்டும்.
கரைத்து குளிர்சாதனப்பெட்டியில் 8-9 மணி நேரங்கள் வைத்தும் உபயோகிக்கலாம்.]
எண்ணெயை மிதமான சூட்டில் காயவைத்து ஒரு சிறு கரண்டியால் எண்ணெயில் விடவும்.
பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். எண்ணெய் வடியவிட்டு ஆறவைத்து பரிமாறவும்.
இந்தக் அப்பம்  அறை வெப்பநிலையில் 1-2 நாட்கள் நன்றாக இருக்கும்.
மாவில் சர்க்கரை சேர்த்து கரைத்திருப்பதால் அப்பம்  சீக்கிரம் சிவக்கும். கவனமாக இருக்கவும்.
இதில் வெல்லம் சேர்த்தும் செய்யலாம்.