Thursday, 30 January 2014

கருவடாம் பலவிதம்..



சாப்பாட்டுக்கு சுவை சேர்க்கிற மொறமொறப்பான வடாம்களைப் பார்ப்போமா?

ஜவ்வரிசி முத்து வடாம்

தேவையானவை:

ஜவ்வரிசி – 1 கிலோ
பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணப் பொடிகள் – ஒவ்வொன்றும் சிட்டிகையளவு.

செய்முறை:

ஜவ்வரிசியை இரவு நன்கு களைந்து ஐந்து பாகங்களாகப் பிரித்து தனித்தனி பாத்திரங்களில் போடவும். தேவையான உப்பு, ஒவ்வொரு வண்ணப்பொடி கலந்து, ஜவ்வரிசி முழுகும் அளவு நீர் ஊற்றி வைக்கவும். ஒரு பாகத்தை கலர் சேர்க்காமல் வெண்மை நிறத்திலேயே ஊற வைக்கவும். மறு நாள் காலையில் உதிர் உதிராக இருக்கும். ஹார்லிக்ஸ், ஊறுகாய் பாட்டில் மூடிகளை எடுத்து நன்கு துடைத்து எண்ணெய் தடவவும். ஊறிய ஜவ்வரிசியை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பரப்பவும். கேஸில் குக்கரை வைத்து தண்ணீர் விட்டு சூடாக்கவும். இட்லித் தட்டு அல்லது ஒற்றைத் தட்டில் ஜவ்வரிசி நிரப்பிய மூடிகளை வைக்கவும். குக்கரை மூடி, வெயிட் போடாமல் வேகவிடவும். பிறகு பிளாஸ்டிக் பேப்பரை விரித்துப் போட்டு, அதில் மூடிகளை அழுத்தமாகத் தட்டினால் வெந்த கருவடாம் வட்டமாக விழும். வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும். தனித்தனி வண்ணமாகவோ இரண்டு மூன்று வண்ணங்களைச் சேர்த்தோ மூடிகளில் பரப்பி செய்தால் அழகாக இருக்கும். எண்ணெயில் பொரித்தெடுக்க முத்து கருவடாம் தயார்.

மிக்ஸட் கலர் கருவடாம்

தேவையானவை:

மெல்லிய பம்பாய் ரவா – 1 கிலோ
பச்சை மிளகாய் – 20
பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன்
வண்ணப் பொடிகள் – 2, 3 வண்ணம்

செய்முறை:

ரவையை காலையில் ஊற வைக்கவும். இரவு கையால் அழுத்திக் களைந்து சல்லடையில் வடிகட்டிப் பாலெடுக்கவும். மேலும் மூன்று முறை பாலெடுக்கவும். (கோதுமை அல்வாவுக்கு செய்வது போல்). பாலை ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி மூடி வைக்கவும். மறு நாள் காலை மேலே தெளிந்த நீரை இறுத்து விடவும். பாத்திரத்தில் 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும். ஒரு கப் வெந்நீரை எடுத்து வைக்கவும். பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தை நைஸாக அரைத்து, கொதிக்கும் வெந்நீரில் சேர்க்கவும். அதில் ரவாப் பாலை விட்டு கைவிடாமல் கிளறவும். தண்ணீர் போதாவிட்டால், எடுத்து வைத்த வெந்நீரை விட்டுக் கொள்ளவும். வெந்து கையில் ஒட்டாமல் வந்ததும் இறக்கவும். முதல் நாளிலிருந்து ஊறுவதால் அதில் புளிப்பு இருக்கும். மேலும் தேவையெனில் எலுமிச்சை சாறு பிழிந்து, ஓமப்பொடி தட்டில் வில்லைக் கருவடாம்களாகப் பிழியவும். வண்ணப் பொடிகளைத் தண்ணீர் விட்டுத் தனித்தனி கிண்ணங்களில் கரைத்து, இங்க் ஃபில்லரால் வடாமின் மூன்று பக்கமும் ஒவ்வொரு வண்ணத்தில் ஒரு சொட்டு விடவும். நன்கு காய வைத்து பொரிக்க ஒவ்வொரு வடாமும் கண்ணைப் பறிக்கும்.

தக்காளி கருவடாம்

தேவையானவை:

ஜவ்வரிசி – அரை கிலோ
தக்காளி – கால் கிலோ
பச்சை மிளகாய் – 12
பெருங்காயப் பொடி – அரை டீஸ்பூன்

செய்முறை:


வெந்நீரில் தக்காளியைப் போட்டு, தோல் உரித்து மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டி சாறெடுக்கவும். ஜவ்வரிசியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, வேகவிட்டு கெட்டிக் கூழாக்கவும். அதில் தக்காளி சாறு, பச்சை மிளகாய் விழுது, பெருங்காயப்பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிளாஸ்டிக் பேப்பரில் சிறு கரண்டியால் வடாம் இட்டு காயவைக்கவும். இளஞ்சிவப்பு நிற தக்காளி கருவடாம் மிக ருசியாக இருக்கும்.

உருளைக்கிழங்கு அல்வா

தேவையானவை:
உருளைக் கிழங்கு - ¼ கிலோ
சர்க்கரை -  300 கிராம்
நெய் – 150 கிராம்
முந்திரிப் பருப்பு – 10
ஏலக்காய்
பால் - ¼ கப்

செய்முறை:
உருளைக் கிழங்கை நன்கு அலம்பி, வேகவைத்து, தோலியை நீக்கி, மசிய அரைக்கவும். முந்திரியை பால் விட்டு அரைத்து உருளைக் கிழங்கு விழுதுடன் சேர்க்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் ½ கப் நீர் விட்டு, சர்க்கரையைப் போட்டு பாகு கம்பி பதம் வந்ததும், உருளைக் கிழங்கு விழுதைப் போட்டு அடி பிடிக்காமல் கிளறி நெய்யை விட்டு சுருண்டு வரும்வரை கிளறவும்.

கேசரிபவுடர், ஏலப்பொடி செய்து போட்டு அல்வா பதத்திற்கு வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டு போடவும்.



Sunday, 12 January 2014

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

போகி  முடிந்தது! அடுத்து பொங்கல் செய்வதைப் பார்ப்போம்!
எல்லாரும் செய்யும் பொதுவான சமையல் சர்க்கரைப் பொங்கலும், வடையும். சில வீடுகளில் வெண்பொங்கல்,அவிஸ்  இவற்றையும் செய்வதுண்டு.

அவிஸ் என்பது அரிசியை வெறும் வாணலியில் சற்று பிரட்டி, அத்துடன் நீரும், பாலும் சேர்த்து குழைய வேகவிடவேண்டும். அத்துடன் சிறிது பொடித்தவெல்லம், இளம் தேங்காய், வாழைப்பழம்,நெய்  சேர்த்து நிவேதித்து சாப்பிட வேண்டும்.

வெண் பொங்கல் 
ஒரு கப் பச்சரிசியுடன் 1/4கப் பயத்தம்பருப்பு சேர்த்து வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். அத்துடன் 41/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 5,6 சத்தங்கள் வரும்வரை குழைய வேகவிடவும். குக்கரைத் திறந்து நன்கு கிளறி விடவும். தேவையான உப்பு, பெருங்காயப்பொடி சேர்க்கவும். 4 டீஸ்பூன் நெய்யைக் காயவைத்து 12 முந்திரிபருப்பு, 10 காய்ந்த திராட்சை வறுத்துப் போடவும். மேலும் 2 டீஸ்பூன் நெய்யில் பொடியாக நறுக்கிய இஞ்சி, முழுமிளகு 6, 1 டீஸ்பூன் ஜீரகம், ஒரு கொத்து கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் கொட்டவும். பொங்கலை மேலும் சுவையாக்க, 1/2 டீஸ்பூன் மிளகு, சீரகப்பொடி நெய்யில் தாளிக்கவும். பொங்கலில்  எல்லாம் சேர்ந்து கொள்ளும்படி நன்கு கிளறவும். பொங்கலின் மீது 2 டீஸ்பூன் நெய் விட்டு சூடாகப் பரிமாறவும். சிறு துண்டு இஞ்சியை அரைத்துப் பொங்கலில் சேர்த்தால் வாசனையாக இருக்கும். அரைத்துப் போட்டால் தாளிக்கும் இஞ்சித் துண்டுகளை குறைத்துக் கொள்ளவும். கமகம வெண்பொங்கல் ரெடி!

சர்க்கரைப் பொங்கல்

தேவை
அரிசி-1 கப் 

பயத்தம்பருப்பு -1/4 கப் 

வெல்லம்-1கப் 

கல்கண்டு-1/2கப் 

பால்- 1 கப் 

முந்திரி -,திராட்சை -15 

நெய்-1/4கப் 

ஏலக்காய்-8,ஜாதிக்காய்-,குங்குமப்பூ- 5,6இதழ்கள்,  பச்சைகல்பூரம்-சிறுதுளி

செய்முறை
அரிசி, பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்.  பொங்கல் அன்று வெண்கலப் பானைக்கு சந்தனம், குங்குமம்  இட்டு, புது மஞ்சள் கொத்தை சுற்றி அதில்தான் பொங்கல் செய்வது வழக்கம். பாலுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து  வைத்து, கொதித்ததும், அரிசி, பருப்பைக்  களைந்து போட்டு அடிக்கடி கிளறவும். பொங்கல்  பொங்கி வரும்போது 'பொங்கல் பொங்குவதுபோல வாழ்வில் எல்லா செல்வமும் பொங்கிப் பெருக வேண்டும்' என்று இறைவனை வேண்டி 'பொங்கலோ பொங்கல்' என்று  கூவவேண்டும். பொங்கல் நன்கு குழைய வெந்ததும் அதில் பொடிசெய்த வெல்லம் மற்றும் கல்கண்டு சேர்க்கவும். கரைந்து  நன்கு சேர்ந்துகொண்டதும் இறக்கவும். நெய்யில் முந்திரி,திராட்சை வறுத்துப் போடவும். ஜாதிக்காயை நெய்யில் வறுத்து, ஏலக்காய், ப.கல்பூரம்  சேர்த்துப் பொடி  சேர்க்கவும். குங்குமப்பூவை சிறுதுளி பாலில்  கரைத்து விடவும். மீதமுள்ள நெய்யையும் பொங்கலில் சேர்த்து கலக்கவும். பொங்கல் இறக்கும்போது சற்று தளதளவென்று இருக்கும். ஆறியதும் சரியாகிவிடும்.


உளுந்து வடை
ஒரு கப் உளுத்தம்பருப்புடன், 2 டீஸ்பூன் அரிசி சேர்த்து களைந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். அத்துடன் 4 மிளகாய் வற்றல், 2 பச்சைமிளகாய், தேவையான உப்பு சேர்த்து அளவாக தண்ணீர் சேர்த்து நைசாக, கெட்டியாக அரைக்கவும். அத்துடன் பெருங்காயப்பொடி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து, வட்டமாகத் தட்டி நடுவில் விரலால் சிறிய துளை செய்து எண்ணையைக் காயவைத்து வடைகளாகத் தட்டவும்.


எழுகறிக் குழம்பு
பொங்கல் அன்று பல காய்கறிகளைச்  சேர்த்து செய்யப்படும் வித்யாசமான குழம்பு இது. ஏழு காய்கறிகள் சேர்ப்பது வழக்கம். அதனால் இப்பெயர். ஆனால் இதற்கு மேலும் கூட்டியோ, அல்லது கிடைத்த காய்கறிகளைக் கொண்டும் இந்தக் குழம்பு செய்யலாம்.ஆனால் காய்கறிகள் எண்ணிக்கை ஒற்றைப் படையாக இருக்க வேண்டும்.

தேவை
காரட், உருளைக்  கிழங்கு,  சர்க்கரை  வள்ளிக்கிழங்கு,  சேனைக்  கிழங்கு, கருணைக் கிழங்கு, பூசணி, பரங்கி,வாழைக்காய் ---  சற்று பெரிதாக  நறுக்கிய  துண்டங்கள்---- 2 -2 1/2கப்புகள் 

மொச்சைக்  கொட்டை, பட்டாணி ---- 1/4 கப் 


அவரை,  கொத்தவரை,  பீன்ஸ் --- 1/4 இன்ச்  நீள  துண்டுகள்----தலா -- 1/2கப் 


துவரம் பருப்பு--- 1/2 கப் 


புளி---- 1  பெரிய  எலுமிச்சை  அளவு 


எண்ணை--- 5 டேபிள்  ஸ்பூன் 


நெய்-2 டீஸ்பூன் 


உப்பு--- தேவையான  அளவு 


வறுத்து  அரைக்க 


பெருங்காயம்--- 1 துண்டு 


உளுத்தம்பருப்பு -2 தேக்கரண்டி 


கடலைப்  பருப்பு--- 4 தேக்கரண்டி 


தனியா--- 6 தேக்கரண்டி 


மிளகாய்  வற்றல்--- 10  முதல்  15 


துருவிய  தேங்காய்--- 1/2 கப்


தாளிக்க
கடுகு--- 4 தேக்கரண்டி 

பச்சை  மிளகாய்--- 4 


கறிவேப்பிலை 


கொத்துமல்லி  தழை


செய்முறை
துவரம் பருப்பை 11/2 கப் நீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும். 

3 டேபிள்  ஸ்பூன்  எண்ணையில்  முறையே  பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கடலைப்  பருப்பு, தனியா,  மிளகாய்  வற்றல்,  தேங்காயைத்  தனித்  தனியே  சிவக்க வறுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில்  அரைக்கவும். புளியுடன்  4  கப்  நீர் சேர்த்துக்  கரைக்கவும்.. பூசணி, பரங்கி, வாழைக்காய் தவிர மற்ற   காய்கறித் துண்டங்களை  சிட்டிகை மஞ்சள்பொடி, உப்பு  சேர்த்து  நசுங்கும்  பதத்திற்கு வேகவைத்து  வடிகட்டவும்.


புளிக்கரைசலில் பூசணி, பரங்கி, வாழைக்காய் துண்டுகளைச் சேர்த்து  கொதிக்கவிடவும்.  சற்று  புளிவாசனை  போனதும்  பாதி வெந்த  காய்கறிகள், தேவையான  உப்பு  சேர்த்துக் கொதிக்க  வைக்கவும்.


நன்கு  கொதித்து  சேர்ந்து  கொண்டதும்,  அதில்  அரைத்த  கலவை,வெந்த துவரம்பருப்பு  சேர்த்து  கொதிக்க  விடவும்.


10  நிமிடம்  கொதித்ததும்  இறக்கி,  2  டேபிள்ஸ்பூன்  எண்ணை மற்றும் நெய்யை சுடவைத்து கடுகு,  வாய்  கீறிய  பச்சைமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.


இதில் சாம்பார்பொடி சேர்க்கக் கூடாது.விருப்பப்  பட்டால்  இதில்  ஒரு  சிறிய துண்டு  வெல்லம் சேர்க்கலாம்.


மேலே  கறிவேப்பிலை,  கொத்துமல்லி  தழை  சேர்த்தால்  மணக்கும்  எழுகறிக்  குழம்பு  ரெடி!!


இனிப்பான சர்க்கரைப் பொங்கலுக்கு இந்த குழம்பு சூப்பர் மேட்ச்.


நிறைய காய்கறிகள் சேர்ப்பதால் குழம்பு அதிகமாக இருக்கும்.மிகுந்த குழம்பில் மறுநாள் சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி வதக்கி சேர்த்து கொதிக்கவிட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும்.இதனை எரித்த குழம்பு என்று சொல்வதுண்டு.

கனு அன்று விடியற்காலை உடன்பிறந்த சகோதரர்களின் நலன் கருதி திறந்த வெளியில் கனுப்பிடி வைக்க வேண்டும். முதல் நாள் சாதத்தில் தயிர் விட்டு பிசைந்து, அதில் மஞ்சள்பொடி கலந்து வெள்ளை,மஞ்சள் வண்ண சாதங்களும், சர்க்கரைப் பொங்கல், குழம்பு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், கரு
ம்புத் துண்டுகளை மஞ்சள் இலைகளில் ஒற்றைப் படை எண்ணிக்கையில் வரிசையாக வைத்து, நைவேத்தியம் செய்து, காக்கை கூட்டம், குருவிக் கூட்டம் போல சகோதரர்களின் குடும்பம் பெருகி, என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டிக் கொள்ள வேண்டும். சிலர் குங்குமம் கலந்து சிவப்பு சாதமும் வைப்பார்கள்.கனுப்பிடி வைத்த பின்பே குளிக்க வேண்டும். அன்று எலுமிச்சை, தேங்காய், தயிர், புளி, வெல்ல சாதம், கல்கண்டு சாதம் போன்ற கலந்த சாத  வகைகளை செய்ய வேண்டும்.

புளியோதரை செய்ய நான் ஏற்கனவே கொடுத்த சமையல் குறிப்புப்படி புளிக் காய்ச்சல் செய்து, அத்துடன் சாதம் சேர்த்து பிசைய வேண்டும்.

எலுமிச்சை சாதம்...

சாதத்தை ஆறவைக்கவும். 3 டீஸ்பூன் நல்லெண்ணையைக் காயவைத்து அதில் பெருங்காயப்பொடி, கடுகு, பொட்டுக் கடலை, 2 நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து சாதத்தில் கொட்டி, சிறிது மஞ்சள்பொடி, தேவையான உப்பு சேர்த்து, ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து கலக்கவும்.

இதில் கடலை, முந்திரிபருப்பு வறுத்து சேர்க்கலாம்.

பச்சை பட்டாணியை வேகவைத்து சேர்க்கலாம். கேரட்டை துருவி மேலே போட்டு கலந்தால், வண்ணமயமான எலுமிச்சை சாதம் தயார்!

தேங்காய் சாதம் ...
2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 டீஸ்பூன் நெய்யைக் காயவைத்து அதில் பெருங்காயப்பொடி, கடுகு, உளுத்தம்பருப்பு, நிலக்கடலை, முந்திரிபருப்பு, நறுக்கிய 2 பச்சை மிளகாய், கிள்ளிய 2 மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து அதிலேயே துருவிய தேங்காய்(ஒரு  மூடி)சேர்த்து சற்று சிவக்க வறுத்து அதை சாதத்தில் கலக்கவும். இந்த சாதத்திலும் பச்சைப் பட்டாணி வேகவைத்து சேர்க்கலாம்.

 Displaying IMG_20150421_111036_1429608272624.jpg

கல்கண்டு சாதம்...
1 கப் அரிசியை 2 கப் பால், 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும். அதில்  11/2 கப் பொடி செய்த கல்கண்டு சேர்த்து நன்கு கிளறவும். 5 ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சை, பாதாம் துண்டுகளை வறுத்துப் போடவும். ஏலக்கய் பொடி, ஜாதிக்காய் பொடி சேர்க்கவும். குங்குமப்பூவை பாலில் கரைத்து விடவும். சுவையான  கல்கண்டு சாதம் நாக்கில் கரையும்.
 
தயிர் சாதம்...
இதற்கும் சாதம் நல்ல குழைவாக வடிக்க வேண்டும்.2ஸ்பூன் நல்லெண்ணையில் பெ.பொடி, கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, கிள்ளிய கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். கேரட், வெள்ளரிக்கையை நீளவாக்கில் சிறிதாக நறுக்கி சேர்க்கவும்.பாலும், கெட்டித் தயிருமாகக் கலந்து விட்டுப் பிசையவும். 1 ஸ்பூன் வெண்ணை சேர்த்தால் அருமையான தயிர் சாதம் ரெடி. இதில் பிடித்தவர்கள் மோர் மிளகாயை வறுத்துப் போடலாம்.


அவியலோடு கலந்த சாதங்களுக்கு தொட்டுக் கொள்ள உருளைக் கிழங்கு ரோஸ்ட்,பொரித்த அப்பளம் நல்ல பொருத்தம்!

அவியல் 
தேவை
தயிர்--- 1  கப் 

தேங்காய்த்துறுவல்-- 3/4 கப் 


காய்கறிக்கலவை--- 2 1/2 கப் 


(பீன்ஸ், காரட், வாழைக்காய், கத்தரிக்காய், பூசணிக்காய், முருங்கைக்காய், அவரைக்காய், கொத்தவரைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, புடலங்காய், பட்டாணி) இதில் விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். 


பச்சை  மிளகாய்-- 3  (அ) 4 


உப்பு-- தேவையான  அளவு 


தேங்காய்  எண்ணை--- 4 தேக்கரண்டி 


கடுகு--- 1 தேக்கரண்டி 


கறிவேப்பிலை--- 3 கொத்து


செய்முறை 
பட்டாணி  தவிர  மற்ற  காய்கறிகளை  ஒரே  அளவான  சிறு  துண்டுகளாக
நறுக்கிக்  கொள்ளவும்.  தேவையான  தண்ணீர்,  ஒரு தேக்கரண்டி  உப்புசேர்த்து நன்கு வேகவிட்டு  வடிகட்டவும்.


தேங்காயையும்,  பச்சை  மிளகாயும் சிறிது  தயிர்  சேர்த்து  மிக்ஸியில்நைஸாக அரைக்கவும்.


வெந்த  காய்கறிகளுடன்  அரைத்த  தேங்காய்  விழுது, தேவையான  உப்புசேர்த்து நன்கு  கலந்து  கேஸில்  வைத்துக்  கொதிக்க  விடவும்.


கீழே  இறக்கி  அதில்  தயிர்  சேர்த்து  நன்கு  கலக்கவும்.  தயிரை
கீழே  இறக்கியபின்புதான்  சேர்க்க  வேண்டும். 


கொதிக்கும்போதுசேர்த்தால்  நீர்த்துவிடும்.மேலே  பச்சைத்  தேங்காய் எண்ணை  2 தேக்கரண்டி  ஊற்றி,  மேலும் இரண்டு  தேக்கரண்டி தேங்காய்  எண்ணையில்  கடுகு   தாளித்துக்கொட்டவும்.கறிவேப்பிலையை  சேர்த்து  அவியலை நன்கு  கலக்கவும் .

காய்கறிகளை  குக்கரிலும்  வேக விடலாம். வெயிட்டைப்  போட்டு  2சத்தம்  விட்டால்  போதும்
.

Saturday, 11 January 2014

பொங்கலோ பொங்கல்

பொங்கல்  தமிழ்நாட்டின்  முதல்  முக்கிய பண்டிகை. நான்குநாட்கள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தமிழர் திருநாள். ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சிறப்பு. முதல்நாள் போகியன்று பழையன கழித்து புதிய எண்ணங்களை ஏற்கும் நாள்.

மறுநாள்  நம் உயிருக்கு ஆதாரமான  உணவு விளைவிக்க உதவும் சூரியனை போற்றி வணங்கும் நன்னாள்.

அடுத்து உழவுக்கு உதவும் மாடுகளுக்கு உயர்வு செய்யும் நாள்.அத்துடன் உடன்பிறந்த சகோதரர்களின் நலம் வேண்டி பெண்கள் வழிபடும் நாளும் கூட. கடைசி நாள் உறவினர் மற்றும்  நண்பர்களுடன் இன்பமாகக் கழிக்கும் காணும் பொங்கல் திருநாள்! தமிழ்ப் புலவரான திருவள்ளுவர் நாளும் அன்றே.

ஒரு பண்டிகை என்றாலே அதற்கான  தனிப்பட்ட  சமையல்களும் அவற்றிற்கு சிறப்பு சேர்ப்பவையே! இனிப்பில்லாத பண்டிகை ஏது?பொங்கல் தினங்களில் செய்யப்படும் சமையல் வகைகள் பற்றி பொதுவாக அந்நாளைய பெண்களுக்குத் தெரிந்திருக்கும். புதிதாகத் திருமணமானவர்கள், வெளி மாநிலம், நாடுகளில் வாழ்பவர்கள் விபரமாகத் தெரிந்து கொள்ளவே இங்கு எழுதுகிறேன்.

போகியன்று செய்யவேண்டிய முக்கியமான சமையல்....பச்சடி,பாயசம் , ஆமவடை, போளி ..மற்றபடி சாம்பார், ரசம் அவரவர் விருப்பம்.

பொங்கல் அன்று ...சர்க்கரைப் பொங்கல்,உளுந்து வடை எல்லா காய்கறிகளும் சேர்த்து செய்யும் எழுகறிக் குழம்பு இவை அவசியம்.சிலர் வெண் பொங்கலும் செய்வார்கள்.

பொங்கல் அன்று காலையில் வீட்டை சுத்தம் செய்து வாசலில் அவரவர்  பெரிய கோலங்கள், ரங்கோலி இவரைப் போடலாம்.கிராமங்களில் சூரியனுக்கு எதிரில் பொங்கல் வைக்கும் வழக்கம் உண்டு. தனியான வீடுகளில் முற்றம், கொள்ளையில் கிழக்கு நோக்கி கோலம் போட்டு பூஜை செய்து, பொங்கலை நைவேத்தியம் செய்வர்.இன்று நாம் இருப்பது தீப்பெட்டி ஃ பிளாட்டுகளில்!இங்கு எங்கே வாசலும், முற்றமும்? சுவாமி அறையில் இழைகோலமாக கிழக்கு நோக்கி ரதம் போல் வரைந்து, நடுவில் காவி இட்டு அதில் வடக்கில் சூரியனையும்,தெற்கில் சந்திரனையும்  வரைந்து பூஜிக்க வேண்டும்.அதற்கான கோலத்தை கீழே வரைந்துள்ளேன்.

கனுப்பண்டிகை அன்று பிசைந்த சாத வகைகள் செய்வது வழக்கம். ஆமவடை, கல்கண்டு சாதம் அல்லது சர்க்கரை சாதம் செய்யலாம்.
இவற்றை செய்யும் முறை கீழே.

போகி சமையல்
எந்தப் பாயசம் வேண்டுமானாலும்  செய்யலாம். நான் தேங்காய்ப் பாயசம் எழுதியுள்ளேன்.

தேங்காய் பாயசம்

தேவை 

தேங்காய்-1 மூடி,பாதாம் -10, வெல்லம் -1/4 கப், சர்க்கரை-1/2 கப், அரிசி-3 தேக்கரண்டி, ஏலக்காய்-5, மிந்திரி,திராட்சை-10, நெய்-3 தேக்கரண்டி, குங்குமப்பூ -3 இதழ்கள்.

செய்முறை:

அரிசியை சிறிதளவு நீரில் ஊற வைக்கவும். பாதாமை வெந்நீரில்  ஊற வைக்கவும். தேங்காயுடன், தோலி  நீக்கிய பாதாம், ஏலக்காய், ஊறிய அரிசி சேர்த்து மிக்சியில் 1/2 கப் நீர் சேர்த்து நன்கு அரைக்கவும். அதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் வைத்துக் கைவிடாமல் கிளறவும்.இல்லையெனில் அடிபிடித்து விடும். தேங்காய் பச்சை வாசனை போய் நன்கு வெந்ததும் அதில் வெல்லம், மற்றும் சர்க்கரையைச் சேர்க்கவும். சற்று கிளறி நன்கு சேர்ந்து கொண்டதும், நெய்யில் மிந்திரி, திராட்சை வறுத்துப் போடவும். குங்குமப்பூவை சேர்க்கவும். மணமான தேங்காய்ப் பாயசம் தயார்.



ஆம வடை

தேவை: 

துவரம்பருப்பு-1/2 கப், கடலைபருப்பு-1/2கப், உளுத்தம்பருப்பு-1/4கப், பயத்தம்பருப்பு-3மேசைக்கரண்டி,சிறிய ஜவ்வரிசி-4தேக்கரண்டி ,மிளகாய் வற்றல்-6,பச்சைமிளகாய்-2, பெருங்காயம்-1/8தேக்கரண்டி, மஞ்சள்பொடி-2 சிட்டிகை,உப்பு-தேவையான அளவு, கறிவேப்பிலை ,எண்ணெய் வேகவிட

செய்முறை

ப.பருப்பு, ஜவ்வரிசியைத் தனியாக ஊறவைக்கவும்.து.பருப்பு, க.பருப்பு, உ.பருப்புகளை சேர்த்து நன்கு களைந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும். 

அத்துடன் மி.வற்றல்,பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் சற்று கரகரப்பாக அரைக்கவும். அத்துடன் ஊறிய ப.பருப்பு, ஜவ்வரிசி, பெருங்காயம், மஞ்சள்பொடி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து எண்ணை காய்ந்ததும்  சிறிய வடைகளாகத் தட்டவும். 

இந்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ் சேர்த்தும்  தட்டலாம்.

போளி

தேவை

பூரணத்திற்கு...கடலைப் பருப்பு -1 கப்,வெல்லம்-11/2 கப், சர்க்கரை-1/4 கப்,தேங்காய்த் துருவல்-1/2 கப், ஏலப்பொடி-1/2 டீஸ்பூன்  
மேல்மாவிற்கு...மைதாமாவு-11/2கப், உப்பு-1சிட்டிகை, கேசரிபவுடர்-2 சிட்டிகை, நல்லெண்ணெய்-5 டேபிள்ஸ்பூன், நெய் 

செய்முறை

மைதாமாவுடன் உப்பு, கேசரி பவுடர்,,நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, தேவையான  நீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.-

கடலைப் பருப்பை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து குக்கரில் வேகவைக்கவும். வெந்தபருப்பில் தண்ணீரை வடித்துவிட்டு, அத்துடன் வெல்லம், சர்க்கரை, தேங்காயைப் போட்டு,வெள்ளம் கரைந்து சேர்ந்து கொள்ளும்வரை கிளறி இறக்கி ஆறவிடவும். மிக்சியில் நைசாக அரைக்கவும்.ஏலப்பொடி சேர்த்து கலக்கவும். பூரணம் கெட்டியாக இல்லாவிடில், ஒரு வாணலியில் 3 ஸ்பூன் நெய் விட்டு, அதில் பூரணத்தைப் போட்டு சற்று கிளறினால் கெட்டியாகிவிடும். அதை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

ஒரு சிறிய இலை ஏட்டில் எண்ணெயைத் தடவிக்கொண்டு, பிசைந்த மாவை சிறு உருண்டை எடுத்து கையிலும் எண்ணெய் தொட்டுக்கொண்டு வட்டமாக தட்டி அதில் பூரண உருண்டையை வைத்து சுற்றிலும் இழுத்து மூடி, பூரணம் வெளியில் வராதவாறு வட்டமாகத் தட்டவும்.அடுப்பில் தோசைக் கல்லைக் காயவைத்து, அதில் போளியை இலையுடன் போடவும். உடன் இலையை மெதுவாகப் பிரித்து எடுக்கவும். இல்லை கிடைக்காவிட்டால் திக்கான பிளாஸ்டிக் பேப்பரில் இட்டு, மெதுவாகக் கையால் எடுத்துப் போடவும்.போளியை சுற்றி சிறிது நெய் விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.மேலே சிறிது நெய் சேர்த்து பரிமாறவும்.


Friday, 3 January 2014

அங்காயப்பொடி

தேவை :
தனியா- 1/4 கப், மிளகு - 5 டீஸ்பூன், மிளகாய்  வற்றல்- 6, சீரகம்- 2 டீஸ்பூன்,   பெருங்காயம் சிறு துண்டு, வேப்பம்பூ -  1/8  கப்,  சுண்டை  வற்றல் -20,  மணத்தக்காளி  வற்றல் - 5 டீஸ்பூன், ஆய்ந்த கறிவேப்பிலை - 1/4  கப்,  சுக்கு - 1 சிறிய  துண்டு,  ஓமம் - 2 டீஸ்பூன்,  நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
செய்முறை :  
வெறும்  வாணலியை  கேஸில்  வைத்துக்  காய்ந்ததும்  அதில்  வேப்பம்பூ  போட்டுக் கருநிறமாக வறுத்தெடுக்கவும். அதிலேயே சுண்டைக்காய் முதல் ஓமம்  வரைக் கொடுத்தவற்றை ஒவ்வொன்றாகப்   போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். 
தனியா, மிளகு, மிளகாய்  வற்றல், சீரகம்,  பெருங்காயம் ஆகியவற்றை 2 ஸ்பூன் எண்ணையில் வறுக்கவும்.
தேவையான  உப்பு   சேர்த்து மிக்ஸியில்   பொடி செய்யவும்.  
சாதத்தை ஆறவிட்டு ,  அதில் நல்லெண்ணெய்  சேர்த்து தேவையான  பொடி  சேர்த்து பிசையவும்.  நெய்யை  சுட   வைத்து  அதில் கடுகு, கறிவேப்பிலை  தாளித்து  சுட்ட  அல்லது பொரித்த அப்பளம், தயிர்ப் பச்சடியுடன்  சாப்பிடவும். 

இந்த  சாதம்  பிரசவித்த  பெண்களுக்கு அஜீரணம்   வாயு ஏற்படாமல்  தடுக்கும்.  தினமும் சிறிதளவு சாப்பிட   கைக்குழந்தைக்கு  மலச்சிக்கல்,  அஜீரணம்  வராது. பெரியவர்களுக்கும்  வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல்,  அஜீரணம்  ஏற்படும்போது  இந்த அங்காயப்பொடி சாதம்  சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும். நாம்  மறந்து  விட்ட   அந்நாளைய ஆரோக்கிய சமையலில்  இதுவும் ஒன்று.