புதன், 1 மார்ச், 2017

இலை வடகம்

தேவை
இட்லி  அரிசி  1/2 கப்
பச்சை  அரிசி  1/2 கப்
ஜவ்வரிசி  1 மேஜைக்கரண்டி
சீரகம்  1/4 தேக்கரண்டி
ஓமம்  1 சிட்டிகை
பச்சை  மிளகாய்   10
பெருங்காயம்  1 சிட்டிகை
உப்பு தேவையான  அளவு

செய்முறை
இட்லி அரிசி,  பச்சை அரிசி மற்றும் ஜவ்வரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து பின்னர் அரிசிகளை தண்ணீரில்  குறைந்தது  5 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். அரிசியை மற்றும் ஜவ்வரிசியை  வடித்து விட்டு மிக்ஸியில் நைசாக நன்றாக அரைக்கவும். பச்சை மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.
மாவு அரைத்த பிறகு அதில் சீரகம், பெருங்காயம், ஓமம்,  தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கலக்கவும். பச்சை மிளகாய் விழுதை மாவு கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.    இந்த கலவையை  2 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

இலை வடகம் தட்டுகள் கடையில் கிடைக்கும். அவற்றில் இலையை வட்டமாக வெட்டிப் போட்டு, அந்த இலையின் மீது ஒரு கரண்டி மாவை ஊற்றி மெலிதாகத்  தேய்க்க வேண்டும்.  . .




 இப்பொழுது அதை ஆவியில் வேக வைக்கவும்.  இது வேக  1 நிமிடம் தான் ஆகும்.இலைவடகத்தட்டு இல்லையெனில் தனித்த தட்டுகளில் குக்கரில் வைத்து வேகவிடவும்.
 


சூடாக உள்ள போதே வடகத்தை இலையில் இருந்து வெகு சுலபமாக  ( ஈசியாக ) எடுத்து விடலாம். இதேபோல் அனைத்து மாவையும் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.




தனித்தனியாக ஒரு பிளாஸ்டிக் பேப்பர் அல்லது தினசரி பேப்பரில் போட்டு காய வைக்கவும்.
நேரடியாக வெயிலில் வைத்தால் 2 அல்லது 3 மணி நேரத்துல  காய்ந்து விடும்.
காற்று புகாத டப்பாவில் போட்டு பத்திர படுத்தி கொள்ளாம்.

தேவையானபோது எண்ணெயில் பொறித்து சாப்பிடவும். இரண்டு மடங்காக பொரிந்து வரும்.


வியாழன், 29 டிசம்பர், 2016

ஜவ்வரிசி ட்ரை கலர் பொங்கல்

தேவை
ஜவ்வரிசி -- 1 கப்
பயத்தம்பருப்பு  --  1/8 கப்
மைசூர் பருப்பு (Red Masoor Dhal)  --  1/8 கப்
இஞ்சி  -- சிறுதுண்டு
பச்சை மிளகாய்  --  2
மிளகு  --  6 - 8
மிளகு சீரகப்பொடி  --  1 டீஸ்பூன்
கருவேப்பிலை --  1 கொத்து
முந்திரி, திராட்சை  --  தலா 10
நெய்  --6 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி  --  சிறிது
பொடியாக நறுக்கிய காரட், காலிஃபிளவர், உரித்த பச்சைபட்டாணி -- 1/4 கப்
உப்பு

செய்முறை
பருப்புகளை வெறும் வாணலியில் சற்று வறுத்து, அவற்றுடன் காய்கறிகள் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
ஜவ்வரிசியை தனியாக லேசாக வறுத்து வேகவிடவும்.
எல்லாம் ஒன்றாக சேர்த்து உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து கிளறவும்.

இஞ்சி, பச்சைமிளகாயை சிறு துண்டுகளாக்கவும்.பாதி நெய்யை சுடவைத்து அதில் இஞ்சி, ப. மிளகாய், மிளகு, கறிவேப்பிலை, மிளகு சீரகப்பொடி தாளித்து கொட்டவும். மீத நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும்.
இதில் வெங்காயம், கரம் மசாலா சேர்த்து வதக்கி எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட அருமையாக இருக்கும்.


திங்கள், 26 டிசம்பர், 2016

கல்யாண பொங்கல்

தேவை:
பச்சை அரிசி  --1 கப்
பயத்தம்பருப்பு --¼ கப் 
நெய் -- 8 டீஸ்பூன் 
பால் -- ¼ கப்
பெருங்காயப்பொடி -- சிறிது
மிளகு --1 டீஸ்பூன் 
சீரகம் -- 1 டீஸ்பூன்
இஞ்சி -- 1 சிறிய துண்டு 
முந்திரி பருப்பு -- 12
திராட்சை -- 10
மிளகு சீரகப்பொடி --½ டீஸ்பூன் 
கறிவேப்பிலை -- 1 கொத்து 
கடுகு - 2 டீஸ்பூன் 
மஞ்சள்பொடி - 1½ டீஸ்பூன் 
உப்பு -- தேவையான அளவு

செய்முறை 
அரிசியுடன்  பயத்தம்பருப்பு சேர்த்து வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். அத்துடன் 3½ கப் தண்ணீர், பால்,  சேர்த்து குக்கரில் 5,6 சத்தங்கள் வரும்வரை குழைய வேகவிடவும்.

குக்கரைத் திறந்து அதில் தேவையான உப்பு, மஞ்சள்பொடி  சேர்க்கவும்.  4 டீஸ்பூன் நெய்யைக் காயவைத்து  முந்திரிபருப்பு,  காய்ந்த திராட்சை வறுத்துப் போடவும். 

மேலும் 2 டீஸ்பூன் நெய்யில் பெருங்காயப்பொடி, கடுகு, பொடியாக நறுக்கிய இஞ்சி,  முழுமிளகு, ஜீரகம்,  கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் கொட்டவும். 

பொங்கலை மேலும் சுவையாக்க, ½ டீஸ்பூன் மிளகுபொடி நெய்யில் தாளிக்கவும். பொங்கலில்  எல்லாம் சேர்ந்து கொள்ளும்படி நன்கு கிளறவும். பொங்கலின் மீது மீதியுள்ள  நெய் விட்டு சூடாகப் பரிமாறவும். கமகம கல்யாண பொங்கல் ரெடி!

இது கல்யாணங்களில் மங்களகரமாக பரிமாறப்படும்.



வியாழன், 22 டிசம்பர், 2016

ரவா சேமியா தேங்காய்ப்பால் பொங்கல்



தேவை 
வறுத்த ரவா -- 1கப்
வறுத்த சேமியா -- 1/2 கப்
கடலைப்பருப்பு -- 1/4 கப்
துவரம்பருப்பு -- 5 டீஸ்பூன்
இஞ்சி --  சிறுதுண்டு
முந்திரி -- 10
திராட்சை -- 10
தேங்காய்ப்பால் -- 1/2 கப்
கறிவேப்பிலை -- 1 கொத்து
மிளகு -- 1/2 டீஸ்பூன்
மிளகு சீரகப்பொடி -- 1 டீஸ்பூன்
நெய் -- 6 டீஸ்பூன்
உப்பு -- தேவையான அளவு

செய்முறை
கடைகளில் ரோஸ்டட் ரவாவும், சேமியாவும் கிடைக்கும். அவற்றை உபயோகித்து பொங்கல் செய்யலாம்.
பருப்புகளை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். குக்கரில் வேகவிடவும்.

2 கப் தண்ணீருடன் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க விட்டு அதில் சேமியாவை சேர்க்கவும். 
முக்கால் அளவு வெந்ததும், அத்துடன் ரவாவை சேர்த்து வேகவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.

இரண்டையும் சேர்த்து வேகவிட்டால் ரவை அதிகம் வெந்து கூழாகி விடும்.

வாணலியில் நெய்யை விட்டு இஞ்சி,மிளகு, முந்திரி, திராட்சை, மிளகு சீரகப்பொடி, கறிவேப்பிலை போட்டு வதக்கி  பொங்கலில் கொட்டி நன்கு கலக்கவும்.

ரவா,சேமியா சரி அளவு சேர்த்தும் செய்யலாம்.

சட்னியுடன் பரிமாறவும்.