Friday 6 May 2016

வேப்பம்பூரசம் - (2)

    தேவை
    புளி .. 1 பெரிய நெல்லிக்காய் அளவு
    உப்பு -- தேவையான அளவு
    துவரம் பருப்பு -- 1 தேக்கரண்டி
    பெருங்காயம் -- சிறு துண்டு
    தக்காளி -- ½
    காய்ந்த வேப்பம்பூ -- 2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை -- 1 கொத்து
    தாளிக்க
    நெய் -- 4 தேக்கரண்டி
    கடுகு -- 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் -- 3
    மிளகாய் வற்றல் -- 3 
    செய்முறை
    புளியை 1½ கப் நீரில் போட்டு கொதிக்க விடவும். அத்துடன் உப்பு, பெருங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்க விடவும். துவரம்பருப்பை வேகவிட்டு நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். 
    புளி வாசனை போய் நன்கு கொதித்து அளவில் பாதியானதும் பருப்பு தண்ணீர் விடவும். மேலே நுரைத்து வந்ததும், ரசத்தை கீழே இறக்கவும்
    2 தேக்கரண்டி நெய்யை சுட வைத்து கடுகு போட்டு வெடித்ததும், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை வதக்கி ரசத்தில் சேர்க்கவும்
    மீதி நெய்யை சுட வைத்து வேப்பம்பூவை அதில் போட்டு நன்கு பொரிந்து கருஞ்சிவப்பு நிறமானதும் ரசத்தில் கொட்டவும்
    வேப்பம்பூவை ரசத்தை இறக்கி வைத்தபின்பே வறுத்துப் போட வேண்டும். இல்லையெனில் கசந்து விடும். 
    இதற்கு ரசப்பொடி தேவையில்லை. பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் மட்டுமேபோதும். வயிற்றுப் போக்கு, அஜீரணத்திற்கு இந்த ரசம் மிகவும் நல்லது.
    சாதாரணமாக வேப்பம்பூ ரசத்திற்கு தக்காளி பழம், பருப்பு ஜலம் விடுவதில்லை. ஆனால் என் குழந்தைகள் அப்படி ரசம் வைத்தால் 'மருந்து மாதிரி இருக்கிறது' என்று சாப்பிட அடம் செய்வார்கள்....அதற்காக நான் கண்டுபிடித்த முறை இது...இது சுவையில் நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment