Sunday 8 May 2016

எழுகறிக் குழம்பு


பொங்கல் அன்று பல காய்கறிகளைச்  சேர்த்து செய்யப்படும் பாரம்பரியமான குழம்பு இது. இதில்  ஏழு காய்கறிகள் சேர்ப்பது வழக்கம்.  ஆனால் இதற்கு மேலும் கூட்டியோ, அல்லது கிடைத்த காய்கறிகளைக் கொண்டும் இந்தக் குழம்பு செய்யலாம். ஆனால் காய்கறிகள் எண்ணிக்கை ஒற்றைப் படையாக இருக்க வேண்டும்.




தேவை
சர்க்கரை  வள்ளிக்கிழங்கு,  சேனைக்  கிழங்கு, கருணைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, பூசணி, பரங்கி, வாழைக்காய், காரட், கத்தரி, உருளைக்  கிழங்கு,  --  சற்று பெரிதாக  நறுக்கிய  துண்டங்கள் -- 2 -2½ கப்புகள் 
மொச்சைக்  கொட்டை, பட்டாணி -- ¼ கப்
அவரை,  கொத்தவரை,  பீன்ஸ் -- ¼ இன்ச்  நீள  துண்டுகள் -- தலா -- ½ கப் 
துவரம் பருப்பு -- ½ கப்
மைசூர் பருப்பு -- 6 தேக்கரண்டி 
(மைசூர்  பருப்பு சேர்த்தால் நல்ல வாசனை கிடைக்கும்.)
புளி -- 1  பெரிய  எலுமிச்சை  அளவு 
எண்ணை -- 6 டேபிள்  ஸ்பூன் 
நெய் -- 4 டீஸ்பூன் 
உப்பு -- தேவையான  அளவு
வறுத்து  அரைக்க 
பெருங்காயம் -- 1 துண்டு 
உளுத்தம்பருப்பு --2 டீஸ்பூன் 
கடலைப்  பருப்பு -- 4 டீஸ்பூன்
தனியா -- 6 டீஸ்பூன்
மிளகாய்  வற்றல் -- 10  முதல்  15
மிளகு -- 2 டீஸ்பூன்
வெந்தயம் -- கால்டீஸ்பூன்
துருவிய  தேங்காய் -- ½ கப்

தாளிக்க
கடுகு -- 4 டீஸ்பூன்
பச்சை  மிளகாய் -- 4
நிலக்கடலை -- 4  டீஸ்பூன்
கறிவேப்பிலை 
கொத்துமல்லி  தழை




செய்முறை
துவரம் பருப்பு, மைசூர் பருப்பை தேவையான  நீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும். 

3 டேபிள்  ஸ்பூன்  எண்ணையில்  முறையே  பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, தனியா,  மிளகாய்  வற்றல், மிளகு, வெந்தயம், தேங்காயைத்  தனித்  தனியே சிவக்க வறுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில்  அரைக்கவும். 



புளியுடன்  4  கப்  நீர் சேர்த்துக்  கரைக்கவும்.. பூசணி, பரங்கி, கத்தரி, வாழைக்காய் தவிர மற்ற   காய்கறித் துண்டங்களை  சிட்டிகை மஞ்சள்பொடி, உப்பு  சேர்த்து  நசுங்கும் பதத்திற்கு வேகவைத்து  வடிகட்டவும். 




புளிக்கரைசலில் பூசணி, பரங்கி, வாழைக்காய் துண்டுகளைச் சேர்த்து  கொதிக்கவிடவும்.  சற்று  புளிவாசனை  போனதும்  பாதி வெந்த  காய்கறிகள், தேவையான  உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்க  வைக்கவும்.




நன்கு  கொதித்து  சேர்ந்து  கொண்டதும்,  அதில்  அரைத்த  கலவை, வெந்த பருப்பு  சேர்த்து கொதிக்க  விடவும்.




10  நிமிடம்  கொதித்ததும்  இறக்கி,  2  டேபிள்ஸ்பூன்  எண்ணை மற்றும் நெய்யை சுடவைத்து கடுகு, நிலக்கடலை, வாய் கீறிய  பச்சைமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.




இதில் சாம்பார்பொடி சேர்க்கக் கூடாது. விருப்பப்  பட்டால்  இதில்  ஒரு  சிறிய துண்டு வெல்லம் சேர்க்கலாம். 

No comments:

Post a Comment